அழறதா, சிரிக்கிறதான்னே புரியல பாஸு.. அதிகாரம் பறிபோன பின்னும் மடங்காத மணிகண்டன்!
சென்னை: அமைதி சொரூபியான ஆனானபட்ட எடப்பாடியாரையே டென்ஷனாக்கிய பெருமை மாஜி அமைச்சர் மணிகண்டனையே சாரும். எவ்வளவுதான் இம்சைகள் கொடுத்தாலும் 'விட்டுப் பிடிப்போம், விட்டுப் பிடிப்போம்!' என்றபடி அனுசரிச்சு போய்க் கொண்டிருந்த மனிதரை டென்ஷனாக்கி, ஒரேடியாய் சாட்டையை எடுத்து சொடுக்க வைத்தது மணிகண்டன் தானே!
தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், இயல்பிலேயே வாய்த் துடுக்கான அரசியல்வாதிதான். அதிலும் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரை நோக்கி இவர் வீசிய வார்த்தைகளெல்லாமே அதிரி புதிரி ரகங்கள்தான்.
'அவனுங்க நம்ம கட்சி கரைபோட்ட வேஷ்டியை கட்டினா, அதை அவிழ்க்க கூட தயங்க கூடாது! ஆமை மூக்கன் கட்சிதான் அ.ம.மு.க.' என்றெல்லாம் போட்டுப் புரட்டினார். இதனால்தான் மணிகண்டனுக்கு பதவி பறிபோனதும் அ.ம.மு.க.வினர் கொண்டாடி தீர்த்தனர். ஓவராய் வாய் பேசியபோதே அவரை தட்டித்தடுத்திருக்க வேண்டும் தலைமை ஆனால் அதை செய்யவில்லை.

கைகட்டி வேடிக்கை
தினகரனைதானே பேசுறார், நல்லா பேசட்டுமுன்னு கைகட்டி வேடிக்கை பார்த்தனர். அதனால்தான் அன்றைக்கு தங்களின் பொது எதிரியான தினகரனை திட்டியவர், சமீபத்தில் தன் துறைக்குள்ளே எதிரியாக வந்து சேர்ந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை வெளிப்படையாக பறாண்டிவிட்டார். அமைச்சர்களின் தொழில் ரகசியங்களை ஓப்பனாக போட்டு உடைக்கிறாரே என்று பயந்துதான் அதன் பிறகே அலர்ட்டாகி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.

தேவையா இது
இப்போது பதவி பறிபோன கோவத்திலிருக்கும் மணிகண்டன், இனி சும்மா இருக்கமாட்டார். அதிகாரத்திலிருக்கும் முக்கிய புள்ளிகளின் பிஸ்னஸ், சொத்து நிலவரங்களை அடிக்கடி வெளியே எடுத்துவிட்டு, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்பார். இந்த அவஸ்தை தேவையா? என்று தலைமையை நோகின்றனர்.

250 வருஷமா ஓடிட்டிருந்த கடிகாரம்ய்யா!
இது ஒருபுறமிருக்க, தன் பதவி பறிபோன பிறகு பேசியிருக்கும் மணிகண்டன் "இந்த கட்சிக்காக (அ.தி.மு.க) பரம்பரையா உழைச்சுட்டு இருக்கோம். என் தாத்தா காலத்துல துவங்கி, என் காலமுன்னு மூணாவது தலைமுறை தொண்டர்களா இருக்கிறோம். இடைத்தேர்தல் நடைபெற்ற பரமக்குடியில் கட்சியை வெற்றிபெற வைத்தேன். ஆனால் ராம்நாடு எம்.பி. தொகுதியில் முஸ்லீம்கள் ஓட்டுப்போடவில்லைன்னா நான் என்ன பண்ண முடியும்?

தெரியலையே
அதேமாதிரி கேபிள் விஷயத்துல நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஓப்பனா பதிலை சொன்னேன். உண்மையை சொன்னதில் தவறு என்ன இருக்குது? அதுக்குப் போயி முதல்வர் என் பதவியை பறிச்சுட்டார். எனக்கு இதை நினைச்சு அழுவதா, சிரிப்பதா? ன்னு புரியலை. எனக்கு மறுபடியும் பதவி கிடைக்குமான்னும் தெரியலை. பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு." என்றிருக்கிறார் அதிரடியாக.
ஆக இன்னும் மடங்கலை மணிகண்டன்.
- ஜி.தாமிரா












Click it and Unblock the Notifications