அரபிக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
சென்னை: நாளை மே 31ம் தேதிக்கு பிறகு அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதால் தென்மேற்கு பருவமழை தாமதமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
Recommended Video
வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இந்த வருடம் ஜூன் 5ஆம் தேதி பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இரண்டு நாட்கள் முன்பாக வெளியிட்ட அறிவிப்பின்படி ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும் என்று கூறப்பட்டது.

ஓமன் நோக்கி புயல்
ஆனால் இப்போது அதில் மற்றொரு திருப்பமாக, அரபிக் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது, மே 31ம் தேதிக்கு பிறகு புயலாக வலுப்பெற்று ஓமன் நாட்டை நோக்கி நகரத் தொடங்கும். இதன் பாதிப்பால் காற்று சுழற்சி ஏற்படுவதால், தென்மேற்குப் பருவமழை துவங்குவது தாமதமாகக் கூடும் என்று கூறப்படுகிறது.

பாதிப்பு இல்லை
இந்த புயலால் நேரடியாக இந்தியாவிற்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என்ற போதிலும், பருவமழையை தாமதப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது. அதேநேரம் இன்று தமிழகத்தின் 8 மேற்கு மாவட்டங்களில், கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழை
நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் தென் அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் நேற்று 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூரில் 104.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது. மேலும், கடலூர் மற்றும் கரூர் பரமத்தி பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.












Click it and Unblock the Notifications