சென்னையை விட்டு தென் மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுப்பு.. திணறும் பரனூர் சுங்கச்சாவடி!
சென்னை : இதற்கு தான் காத்திருந்தோம் என்பது போல் ஏராளமானோர் சென்னையை விட்டு தென் மாவட்டங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இன்று ஒரு நாள் மட்டும் இ பதிவு தேவையில்லை என்பதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான வாகனங்ள் படையெடுத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கூட்டம் அலைமோதுகிறது
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நாளை முதல் தளர்வில்லாத ஊரடங்கு அறிவித்துள்ளது. அதாவது மே 24ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. இதுவரை இல்லாத ஒன்றாக தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மளிகை கடை
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல திருமணத்திற்கு கூட இபதிவு செய்ய முடியாது. மருத்துவம், இறப்புக்கு மட்டும் இபதிவு செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகள் இயங்கவும் ஒரு வார காலத்திற்கு தடை விதித்துள்ளது.

குவியும் மக்கள்
அதேநேரம் காய்கறிகளை வாகனங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பின் காரணமாக மக்கள் இன்றே ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க மக்கள் இன்று கடைகளில் குவிந்துள்ளனர்.

சொந்த ஊர் பயணம்
இதேபோல் சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், சேலம், ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் பல்லாயிரம் மக்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று ஒரு நாள் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன .இதன் காரணமாக கூட்டம் கூட்டமாக பேருந்து நிலையங்களில் குவிந்துள்ளனர். ஆளைவிட்டால் போதும் சாமி என்ற மனநிலையில் சொந்த ஊர்களுக்கு பயணிக்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்

கூட்டம் அதிகம்
சென்னையில் இருந்து இயக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் செங்கல்பட்டு சுங்கச்சாவடி வழியாக செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லக்கூடிய நிலை காணப்படுகிறது. மக்கள் கூட்டத்தால் பேருந்துகள் திணறுகின்றன.

சென்னை மக்கள் படையெடுப்பு
இதேபோல் சொந்த வாகனங்கள் வைத்துள்ள பலர் கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் என தங்களிடம் உள்ள வாகனங்களில் சென்னையை விட்டு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். செங்கல்பட்டு அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவித்ததில் இருந்து 24மணி நேரம் கூட ஆகாத நிலையில், 2லட்சத்திற்கும் அதிகமான வாகனம் சுங்கச்சாவடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications