4 மாதமாகவே இப்படித்தான் நடக்கிறது! நமது அம்மா ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிய மருது அழகுராஜ் பேட்டி
சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார் மருது அழகுராஜ்.
இவர் இப்படியொரு முடிவெடுத்ததன் பின்னணியில் ஒரு பெரிய விவகாரமே நடந்துள்ளது என்பதை அவரிடம் பேசும் போது உணர முடிந்தது.
ஒன் இந்தியா தமிழிடம் மருது அழகுராஜ் பகிர்ந்த தகவல் வருமாறு;
இரட்டைத் தலைமை
''அம்மாவின் மறைவுக்கு பிறகு எழுத்துப்பணியே வேண்டாம் என்று கருதி ஒதுங்க நினைத்தேன். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் என்னை அழைத்து நீங்கள் தான் ஆசிரியராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பை ஏற்றேன். அது வெளியுலகத்திற்கு அதிமுக கட்சி பத்திரிகை போன்று தெரிந்தாலும் அது உண்மையில்லை. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான கோயம்புத்தூர் காரர் தான் அந்த நாளிதழுக்கு அதிபர். அவர் பெயர் சந்திரசேகர்.''
தனி நபர் அதிபர்
''இதனால் நமது அம்மாவை கட்சிப் பத்திரிகை என்று சொல்ல முடியாது. அது சந்திரசேகர் என்ற தனி நபரால் நடத்தப்படக்கூடிய பத்திரிகை. என்னை ஆசிரியர் பொறுப்பை ஏற்கச் சொன்னது இரட்டை தலைமை தான். இப்போது ஒரு தலைமையை ஓரங்கட்டி ஒரு தலைமையை உயர்த்திப் பிடிக்கச் சொன்னால் அதை என்னால் செய்ய முடியாது. இயக்கம் இரண்டு கூறுகளாக பிளப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ''4 மாதமாகவே நமது அம்மா நாளிதழில் நான் எதுவும் எழுதுவதில்லை. உங்களுக்கு தெரியும் ஒருவரை ஓரங்கட்ட வேண்டும் என்றால் அது எங்கிருந்து தொடங்கும் என்று. இது தனிப்பட்ட ஒருவர் நடத்தும் பத்திரிகை என்பதால் அவர் சொல்வதை தான் கேட்டாக வேண்டும்.''
தத்துப்பிள்ளை
''மொத்தத்தில் நமது அம்மா நாளிதழ் அதிமுகவுக்கு சொந்தமான பிள்ளை கிடையாது. அது தத்துப்பிள்ளை தான். திமுகவுக்கு முரசொலி, மதிமுகவுக்கு சங்கொலி, கம்யூனிஸ்ட் கட்சிக்கு தீக்கதிர் என சொந்தமான பத்திரிகைகள் உள்ளன. இது போல் ஒரு பத்திரிகை அதிமுகவுக்கு கிடையாது. நிறுவனர் பெயரிலிருந்து ஒருவருடைய பெயரை எடுதுவிட்டார்கள். இதற்கெல்லாம் நான் எதிர்ப்பு தெரிவித்து தலையிட முடியாது. ஏனென்றால் முதலாளி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்.''
அடுத்தது என்ன?
''அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் முயற்சிகளை 4 மாதங்களுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டார்கள். இப்போது எனது முடிவு குறித்து யாரும் அழைத்துப் பேசவில்லை. அடுத்தக்கட்ட முடிவு பற்றி விரைவில் அறிவிக்கிறேன்.'' எனக் கூறினார். நமது அம்மா நாளிதழில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான செய்திகளுக்கும், படங்களுக்கும் 4 மாதங்களுக்கு முன்பிருந்தே முக்கியத்துவத்தை குறைக்கச் சொன்னதை மருது அழகுராஜ் கூறுவதிலிருந்து உணர முடிகிறது. இதனிடையே இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.