காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க கூடாது:பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: டெல்லியில் வரும் 17-ந் தேதி நடைபெறும் காவிரி ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை திட்டம் குறித்து விவாதிக்க கூடாது என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு, மேகதாது அணையை கட்டும் திட்டம் தொடர்பாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
பறந்த அட்வைஸ்! பள்ளிகளில் ஆய்வு முடித்த சில நிமிடங்களில்.. முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய ஆர்டர்!
துரைமுருகன் விளக்கம்
இது தொடர்பாக சிலநாட்களுக்கு முன்னர் தமிழக நிரிவளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிப்பதற்கு தமிழக அரசின் பிரதிநிதி எதிர்ப்பு தெரிவிப்பார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் வரம்பு மீறிய செயல் நீதிமன்றத்திலும் ஆணையக் கூட்டத்திலும் சுட்டிக் காட்டப்படும். காவிரி பாசன விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும் என தெரிவித்திருந்தார் துரைமுருகன்.
தமிழகம் வழக்கு
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் மேகதாது அணை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகையால் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பது விதிமுறை மீறல். காவிரி ஆணையத்தின் இந்த முடிவு காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. மேகதாது குறித்து கூட்டத்தில் விவாதிப்பது காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரம்பை மீறியது. ஆகையால் மேகதாது குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
முதல்வர் கடிதம்
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதற்குதான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த உத்தரவுகளை அமல்படுத்துவதுதான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி.
மேகதாது விவாதிக்க கூடாது
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மேகதாது அணைக்கான திட்டப் பணிகள் குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பது சரி அல்ல.மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது.இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.