மெட்ரோ ரயில்களில் புற ஊதா கதிர் கிருமி நாசினி, டச் இல்லா டிக்கெட் - கார்ட் ரீடர் பரிசோதனை
மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்று மூலம் பரவும் கொரோனா வைரஸ் கிருமிகளை அழிக்க, காற்று செல்லும் இடங்களில் புறஊதா கதிர்கள் மூலம் கிருமிகள் அழிக்கப்படுகிறது.
சென்னை: நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று காலை முதல் தொடங்கி உள்ளன. ரயிலின் உள்ளே 25 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் குளிர்சாதன வசதி பராமரிக்கப்படுகிறது.
காற்று மூலம் பரவும் கொரோனா வைரஸ் கிருமிகளை அழிக்க, காற்று செல்லும் இடங்களில் புறஊதா கதிர்கள் மூலம் கிருமிகள் அழிக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்புக்காக டிக்கெட்டுகள் QR வடிவத்தில் வழங்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் இன்று தொடங்கியது. டெல்லி, நொய்டா, லக்னோ, சென்னை உள்பட நாடு முழுவதும் பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் முககவசம் அணிந்து வரும் பயணிகள், கிருமிநாசினி தெளிக்கும் கருவி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல் வெப்பநிலை பரிசோதனையை முடிக்கவேண்டும். இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உடல் வெப்பம் இருக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தனி மனித இடைவெளியை அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அச்சத்திற்கு இடையே மெட்ரோ ரயில் இயக்கம் - இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்
சென்னையிலும் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இன்று காலை 7 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் முககவசம் அணிந்து வரும் பயணிகள், கிருமிநாசினி தெளிக்கும் கருவி மூலம் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். தொடர்ந்து உடல் வெப்பநிலை பரிசோதனையை முடிக்கவேண்டும். இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உடல் வெப்பம் இருக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து தனி மனித இடைவெளியுடன் டிக்கெட் கவுண்ட்டருக்கு செல்லும் பயணிகளுக்கு நேரடி தொடர்புகளை தவிர்க்கும் வகையில் பணமில்லா பரிவர்த்தனையாக தொடுதல் இல்லா பயணச்சீட்டுகளை வாங்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
ஸ்மார்ட் கார்டுகள் பெறுதல் மற்றும் ரீசார்ஜ் செய்வது மற்றும் செல்போன் உதவியுடன் மெட்ரோ ரெயில் செயலியில் 'கியூ.ஆர்.' குறியீட்டு முறையில் டிக்கெட் எடுக்கும் முறை அதிகம் ஊக்குவிக்கப்படும். தவிர்க்க முடியாத காரணத்தால் சுத்தம் செய்த டோக்கன் டிக்கெட் வழங்கப்படுகிறது. கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பிளாட்பாரத்திற்கு செல்லும் வழியில் உள்ள தானியங்கி கதவுகள் அருகில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக, நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் உள்ள 32 ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கதவுகளில், பயண அட்டையை பரிசோதிக்கும் கார்ட் ரீடர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படாமல் டிக்கெட் கவுண்ட்டர்களில் இருந்து விரைவாக பிளாட்பாரத்துக்கு பயணிகள் செல்ல முடியும்.
கூட்ட நெரிசலை தவிர்ப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் 5 முதல் 10 பணியாளர்கள் வரை கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது.
காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை மொத்தம் 43 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து ஏறி, இறங்க வேண்டியிருப்பதால் ரயில் நிலையங்களில் 20 வினாடிகளுக்கு பதில் 50 வினாடிகள் ரயில்கள் நிறுத்தப்படுகிறது.
மெட்ரோ ரயில்களில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பயணிகள் நாள் ஒன்றுக்கு பயணம் செய்தனர். தற்போது நோய் தொற்று காரணமாக பலர் வீடுகளில் இருந்தப்படியே பணியாற்றி வருகின்றனர். இதனால் கூட்டம் குறைவாகவே உள்ளது.