நொறுங்கும் "பூட்டுகள்".. பசியால் சாவதை விட.. கொரோனாவே மேல்.. உயிரை வெறுத்து நடைபோடும் தொழிலாளர்கள்!

தொழிலாளர்கள் பல கிமீ தொலைவுக்கு நடந்தே ஊர்களுக்கு செல்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி, நொய்டா, புனே என வெளிமாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளிகள் தங்கள் சொந்த கிராமத்திற்கு கால்நடையாகவே செல்ல துவங்கி உள்ளது அதிகரித்துள்ளது.. வாழ்வா, சாவா போராட்ட பயணத்தின் துயர காட்சிகள் நம்மை போட்டோக்கள், வீடியோக்கள் மூலமாக தொடர்ந்து உலுக்கி எடுத்து வருகின்றன!!

Recommended Video

    கொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிப்பு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்

    சொந்த மாநிலங்களை விட்டு டெல்லி, நொய்டா, புனே ஆகிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்த பணியாளர்கள் திடுதிப்பென்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அதிர்ந்தனர்.. எந்தவித முன்னேற்பாடுகளையும் இவர்களால் உடனே செய்து கொள்ள முடியவில்லை.

    கூலி வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற எழுதப்பட்ட விதியுடன் நகர்ந்த இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.. டெல்லியில் காய்கறி விற்பவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என இவர்களது எண்ணிக்கைதான் அதிகம்.. இவர்களில் பலரும் அருகில் உள்ள உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

     நடைபயணம்

    நடைபயணம்

    அடுத்து என்ன என்ற கேள்வியுடன் செய்வதறியாமல் தவித்த தொழிலாளர்கள், சாரை சாரையாக சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கிறார்கள். வெத்தலைப் பாக்கு கடை வைத்திருப்போர், பொட்டிக்கடை வைத்திருப்போரும் இதில் அடக்கம்!! டெல்லியில் பில்டிங் பணியில் இரும்பு கம்பிகளை பொருத்தும் வேலையை செய்கிறார் தன்ராஜ்.. 35 வயது.. பதேபூரில் இருக்கிறது தன்ராஜ் வீடு.. வாடகை தரமுடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் இவரது ஹவுஸ் ஓனர்.. 570 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன் வீட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்துள்ளார்!"

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    டெல்லியில் உணவு டெலிவரி வேலை பார்க்கும் 35 வயதான ரன்வீர்சிங் நடந்தே ஊர் போய் சேர்ந்துவிடலாம் என்றுதான் முயற்சித்தார்.. முடிந்தவரை நடந்தார்.. ஒரு கட்டத்தில் நடக்கும்போதே நெஞ்சடைத்துவிட்டது.. நடைபயணம் நரகத்திற்கே சென்றுவிட்டது.. இத்தனைக்கும் இவரது வயது வெறும் 35தான்! இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர்.. இதெல்லாம் போதாதென்று எல்லாவற்றையும் இழந்து சொந்த ஊருக்கு செல்லும் இவர்களை போலீசார் கடுமையாக தாக்கும் வீடியோக்களும் வெளியாகி உள்ளது மேலும் அதிர்ச்சியை தந்துள்ளது..

    கொலைபட்டினி

    கொலைபட்டினி

    உத்திரபிரதேசத்தை நோக்கி சென்ற 8 மாத கர்ப்பிணி யாஸ்மினை கண்டு கலங்கியபடியே உள்ளார் கணவர் வகீல்.. கொளுத்தும் வெயில்.. வழியில் சாப்பாடு இல்லை.. கொலைபட்டினியுடன் கர்ப்பிணியை அழைத்து வரும்போது வகீல் அடக்க முடியாமல் அழுதுவிட்டார்.. ஒருவழியாக மீரட் நகரில் தஞ்சமடைந்து உதவி கோரவும், உள்ளூர் போலீசார் ஒரு ஆம்புலன்ஸை வழங்கி சொந்த கிராமத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

     குழந்தைகள்

    குழந்தைகள்

    இவர்களுக்கு ஒரு சில தன்னார்வலர்கள் மட்டும் உணவுகளை தந்தால், அதை வாங்கி சாப்பிடுகிறார்கள்..
    "நாங்க பரவாயில்லை.. எங்க குழந்தைங்களுக்கு என்ன தருவோம்.. பசிக்குதுன்னு வாய்விட்டு கேட்டும் குழந்தைகளுக்கு எதுவும் தரமுடியல.. வேலை இல்லை.. முதலாளிகளிடம் சென்று பணம் கேட்டால், எங்களுக்கே பிழைப்பு இல்லை என்கிறார்கள்.. பசியில் கிடந்து சாகிறதைவிட, கொரோனா வந்தே சாகறோம்" என்று விரக்தியுடன் நடையை கட்டி வருகின்றனர்!!

    வீடியோ

    வீடியோ

    உத்தர பிரதேசத்தை நோக்கி நடந்த சென்ற தொழிலாளர்களுக்கு சாலை பாதுகாப்பில் இருந்த அரசு ஊழியர்கள் சாப்பாடு தந்தனர்.. அதை வாங்கி சாப்பிடும்போது ஒரு தொழிலாளி கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.. 3 நாளைக்கு அப்பறம் சாப்பாட்டை இப்பதான் கண்ணில் பார்க்கிறோம்.. இன்னும் 600 கி.மீ.தூரம் நாங்க போக வேண்டியிருக்கு என்று சொல்லி கொண்டே சாப்பிடும் இந்த வீடியோவும் வெளியாகி கலங்கடிக்கிறது!!

     குழந்தைகள்

    குழந்தைகள்

    எங்கே போகிறோம், ஏன் போகிறோம் என எதிர்காலம் தெரியாமல் பெற்றோரின் கை பிடித்து நடக்கின்றன குழந்தைகள்.. அம்மா எதுக்காக அழறாங்க.. அப்பா ஏன் நமக்கு சாப்பிட எதுவுமே தரல என்ற வலியான கேள்விகளுடன் குழந்தைகளும் மலங்க மலங்க விழித்து பெற்றோருடன் பயணப்பட்டு வருகின்றனர். அந்த பிஞ்சுகளின் கால்களில் செருப்பு கூட இல்லாத போட்டோக்களை காண முடிகிறது.. சின்ன குழந்தைகளின் கண்களில் பயமும், தலையில் சுமையுடன் நடப்பதை பார்த்தால் இதயமே சுக்குநூறாக சிதைகிறது.. ஒன்றல்ல, இரண்டல்ல.. 100, 200 கிலோ மீட்டர் என்பது மலைப்பான விஷயம்.

     சமூக விலகல்?

    சமூக விலகல்?

    வழியிலேயே சுருண்டு விழுகிறார்கள் மக்கள்.. அவர்களின் பசியால் கால்கள் நடுங்குகின்றன.. தோளில் சுமந்து வரும் குழந்தையை எங்கே கீழே தவறிவிட்டுவிடுவோமோ என்று பதைபதைத்தபடியே அடுத்த அடி எடுத்து வைக்கப்படுகிறது.. இன்னும் கொஞ்சம் தூரம் என்ற பொய்யான நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது.. ஒருகட்டத்தில் சுருண்டும் விழுந்து விடுகிறார்கள்.. இந்த போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. இப்படி கூட்டம் கூட்டமாக செல்வதே சமூக விலகலுக்கு எதிரானதாயிற்றே.. தொற்றுக்கு இது போதுமே.. இதன்மூலம் தொற்று வந்தால் யார் பொறுப்பு? வரும்வழியில் போல உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? அந்த குடும்பத்திற்கு பதில் சொல்வது யார்? என்ற பல விடைதெரியாத கேள்விகளும் எழுகின்றன.

     வேதனைகள்

    வேதனைகள்

    இவர்களின் வலி, வேதனைகள் நீண்டு கொண்டே போகின்றன.. தொற்று பரவும் என்பதால் ஊரடங்கை அறிவித்த அரசு, இப்போது ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் குழும செய்திருப்பது அரசின் பெரும் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.. "நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்" என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டாலும், புலம்பெயர் தொழிலாளர்கள் எல்லோரும் அப்படியே இருந்துவிட முடியாது. தேசத்தின் நலனுக்காக நீங்கள் சில நாட்கள் கஷ்டங்களை பொறுத்துக்கொள்ளுங்கள் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுவிடுவதும் பெரிதல்ல.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    பொதுவாக, அரசின் வார்த்தைக்கும் - மக்களின் வாழ்க்கைக்கும் உள்ள இடைவேளிதான் அரசின் மீதான நம்பகத்தன்மையை தீர்மானிக்கிறது.. அந்த நம்பிக்கையை அரசு பெற்று வருகிறதா என்பதும் கேள்விக்குறியே... முறையான திட்டமிடல் இல்லாததும், எடுத்த எடுப்பிலேயே முடிவுகளை அறிவித்து அதனை தடாலடியாக மக்கள் மீது திணிப்பதும், அதனால் மீண்டும் மீண்டும் மக்கள்தான் பாதிப்படைகிறார்கள் என்பதும் தொடர் சோகமே!!

    திணறல்கள்

    திணறல்கள்

    ஒரேநாளில் மக்களை குழப்புவதும் திணறடிப்பதும் மக்கள் பழக்கப்பட்ட ஒன்றுதான்.. 3 ஆண்டுகளில் சில நடவடிக்கைகளின் போதே இந்த அவஸ்தைகளையும், அல்லல்களையும், இழப்புகளையும் மக்கள் அனுபவித்துவிட்டனர்.. ஆனால், அடுத்தடுத்து வரும் திணறல்களைதான் எதிர்கொள்ள முடியாமல் இப்போது சோர்ந்து போய்விட்டனர்.. தும்பை விட்டுட்டு வாலை பிடிப்பதுதான் நெருக்கடிகளின் மூலகாரணமாக உள்ளது!

     இறுதிபயணம்?

    இறுதிபயணம்?

    நாட்டின் முதுகெலும்புகளான தொழிலாளர்களே இன்று வளைந்து ஒடிந்து நசுங்கி விழுந்து கொண்டிருக்கிறார்கள்.. காதடைக்கும் பசியால் நெடுஞ்சாலைகளில் உழன்றுவரும் தொழிலாளர் குடும்பங்களுக்கு விதிகளோ, விதிமீறல்களோ எதுவுமே ஏறாது.. இவர்களது நடைபயணங்களே இறுதிபயணங்களாகவும் முடிந்துவிடக்கூடாது என்பதே பெரும் கவலையாக உருவெடுத்து உள்ளது.

     உடைகிறது பூட்டு

    உடைகிறது பூட்டு

    இவர்களில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்தால்கூட அந்த விபரீதம் மொத்த நாட்டையும் திணறடித்துவிடும்.. ஊரடங்கு என்பது அவசியம்தான்.. ஆனால் அந்த உத்தரவுக்கு வயிறு அடங்குமோ?!! தொழிலாளர்களின் ஒட்டிய வயிற்றில் கிருமி ஒட்டியிருந்தால், அது இந்த பரவல் தடுப்பு உத்தியையே பாழாக்கிவிடுமே.. இந்த 21 நாட்கள் இழுத்து பூட்டப்பட்ட "பூட்டு" தொழிலாளர்களின் கதறலால் அதிர நொறுங்கி கொண்டிருக்கிறது!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+