ரிலையன்ஸ் வசமாகும் ஆவின்? கோவையில் இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களா? பகீர் கிளப்பும் பால் முகவர்கள் சங்கம்!
சென்னை : ஆவின் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒட்டு மொத்தமாகத் தூக்கிக் கொடுத்து விடும் நடவடிக்கையைச் சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்களோ என்ற மிகப்பெரிய ஐயப்பாடு எழுகிறது என பால் முகவர்கள் சங்க நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பால் விநியோக உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.
தற்போது ஆவினில் நிலவும் உற்பத்தியிலும், விநியோகத்திலும் ஏற்பட்டுள்ள தொடர் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதையும் வைத்து பார்க்கும் போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆவின் தாரை வார்க்கபட இருக்கிறதோ..? என்கிற சந்தேகம் எழுகிறது.'
ஆவின் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்பனை செய்ய அனுமதி- தமிழக அரசு அறிக்கை
ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆவின் தாரை வார்க்கப்படுகிறதா..? என சந்தேகம் எழுவதற்கான கூடுதல் காரணங்கள். 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் Dairy Life எனும் பெயரில் பால் பாக்கெட்டுகள் தயாரித்து அதனை சென்னையில் உள்ள ஆவின் மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்தது. அந்த காலகட்டத்தில் பால் உற்பத்தி குறைவாக இருந்த காரணத்தால் ஆவின் பால் விநியோகம் தட்டுப்பாடாகவே இருந்தது.
ஆவின் பால்
அதனை பயன்படுத்தி ஆவின் மொத்த விநியோகஸ்தர்கள் ரிலையன்ஸ் Dairy Life பால் வாங்கினால் தான் ஆவின் பாலினை தருவோம் என பால் முகவர்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தனர். தற்போது கூட ஆவின் நெய் உற்பத்தியில் 75% ரிலையன்ஸ் நிறுவனத்திற்கே வழங்கப்படுவதால் பால் முகவர்களுக்கும், ஆவின் பாலகங்களுக்கும் ஆவின் நெய் கிடைப்பதில்லை.
கோவை ஆவின்
இந்த சூழ்நிலையில் கோவை ஆவினில் பால் விநியோகத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பணிகள் 90% முடிவடைந்து விட்டதாக பொதுமேலாளர் ராமநாதன் அவர்கள் தெரிவித்திருப்பது கூடுதல் சந்தேகங்களை எழுப்புகிறது. நேற்று காலை ராணிப்பேட்டை, வாலாஜா, ஆம்பூர், ஆற்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 10 மணியாகியும் பால் விநியோகம் செய்யப்படவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் பால்வளத்துறை அமைச்சரின் கவனத்திற்கும், ஆவின் நிர்வாகத்தின் கவனத்திற்கும் தொடர்ந்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாகக் கொண்டு செல்கிறோம்.
மிகப்பெரிய போராட்டம்
ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இந்த தகவல்களை அரசுக்குத் தெரிவித்து வருகிறோம். ஆனால் இந்த பிரச்னையை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கையையும், தமிழக அரசோ, ஆவின் பாலகமோ எடுக்கவில்லை.இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ஆவின் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒட்டு மொத்தமாகத் தூக்கிக் கொடுத்து விடும் நடவடிக்கையைச் சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்களோ என்ற மிகப்பெரிய ஐயப்பாடு நமக்கு எழுகிறது. ஒரு வேளை இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுமாயின், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தைப் பால் முகவர்கள் சங்கம் முன்னெடுக்கும்." என கூறியுள்ளார்.