கவலைப்படாதீங்க.. நீட் தேர்வு பயிற்சி தொடரும்! விலக்கு பெரும் வரை தான்! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
சென்னை : தமிழகத்தில் நீட் விலக்கு ஏற்படும் வரை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி தொடரும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 51.20% மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10% குறைவு ஆகும். 2020-ஆம் ஆண்டில் 57.40% ஆகவும், 2021-ஆம் ஆண்டில் 54.40% ஆகவும் இருந்த நீட் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடப்பாண்டிலும் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தான் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதிய 1,32,167 பேரில், 12.86% மாணவர்கள் தான் அரசு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இதுவே மிகக்குறைந்த விகிதம் ஆகும். அவர்களிலும் கூட சுமார் 20%, அதாவது 3400 மாணவர்கள் மட்டும் தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சரிவு
அவர்களில் 720க்கு 450 முதல் 471 மதிப்பெண் பெற்றவர்கள் வெறும் மூவர் மட்டும் தான். நடப்பாண்டில் பட்டியலினம், பழங்குடியினர் தவிர மற்ற பிரிவுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் 515-க்கும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5% ஒதுக்கீடு மட்டும் இல்லாவிட்டால், அரசு பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக் கூட இடம் கிடைக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

நீட் விலக்கு
இந்நிலையில் தமிழகத்தில் நீட் விலக்கு ஏற்படும் வரை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி தொடரும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலந்து கொண்டார்.

நீட் பயிற்சி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப்பொருட்கள் இல்லாத பள்ளி வளாகங்களாக பள்ளிகள் மாற வேண்டும். மாணவர்களிடையே போதை பொருள் பழக்கத்தை ஒழிப்பது நமது கடமை ஆகும். அதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சிற்பி திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் நீட் விலக்கு ஏற்படும் வரை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி தொடரும். அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய் தகவல்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications