பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் திடீர் மாற்றம்.. மே 5 க்கு பதில் விரைவில் புதிய தேதி.. அமைச்சர் தகவல்
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இரு தேர்வுகளுக்கு மாணவர்கள் சிலர் வராததால் அதுகுறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து யோசனை செய்து முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த தேர்வை 8.75 லட்சம் பேர் எழுதவிருந்தனர். சென்னையில் மட்டும் 180 மையங்களில் 45, 982 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியிருந்தனர். இந்த தேர்வுகள் ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தன. கடந்த ஓராண்டாக விழுந்து விழுந்து அயராது படித்த மாணவர்கள் கடைசி தேர்வன்று மகிழ்ச்சியாக இருந்தனர்.
கோடை விடுமுறை விடப்பட்டதால் மாணவர்கள் துள்ளி குதித்துகொண்டு வீடு திரும்பினர். இந்த நிலையில் மே 5 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாற்றம் இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்படவுள்ளது. மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடப்பதால் முதல்வருடன் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும். திட்டமிட்டபடி மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானால் அது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.