மறுபிறவி எடுத்துள்ளேன்; நான் இங்கு நிற்க காரணம் முதல்வர்தான்... சட்டசபையில் கண்ணீர்விட்ட அமைச்சர்!
சென்னை: மறுபிறவி எடுத்து உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சட்டபேரைவையில் உரையாற்றிய கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் காமராஜ் கண்ணீர்மல்க கூறினார்.
எனது சந்ததி முழுவதும் முதல்வர், துணை முதல்வர் உள்பட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கடமைப்பட்டு இருக்கிறது என்று காமராஜ் தெரிவித்தார்.
தமிழக உணவுத்துறை அமைச்சரரான காமராஜ் கொரோனாவால் கடுமையாக பாதிப்பட்டு குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவில் இருந்து மீண்ட காமராஜ்
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த ஜனவரி மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசம் அடைந்தததால் தீவிர சிகிச்சையில் வைத்து கண்காணிக்கப்பட்டார். அதன்பின்னர் கொரோனாவில் இருந்து அவர் முழுமையாக குணமடைந்தார். இந்த நிலையில் அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். தமிழக அமைச்சகர்கள் உள்பட அனைவரும் அவரிடம் நலம் விசாரித்தனர்.

மோசமான நிலையில் பாதிக்கப்பட்டேன்
தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அமைச்சர் காமராஜ் பேசினார். அப்போது அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:- கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து 2 முறையாகவும் அமைச்சராக பதவி வகித்து வருகிறேன். கொரோனா தொற்றால் ஜனவரி 19-ம் தேதி மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டேன். என் உயிர் உடலில் இருக்கிறதா? இல்லையா என்று தெரியாத நிலை ஏற்பட்டது. அப்போது டெல்லியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கரை அனுப்பி உடனே பார்க்க சொன்னார்.

முதல்வர் எடுத்த நடவடிக்கை
துணை முதல்வர் பன்னீர் செல்வம் எனது மகனை தொடர்ப்பு கொண்டு பேசினார். மருத்துவமனையில் இருக்கும் நான் பிழைத்துக் கொள்வேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறுதலாக கூறினார். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது போல், நான் மறுபிறவி எடுத்து உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். உயிரற்ற சடலம்போல ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்த போது, முதல்வர் உடனடியாக பேசி காமராஜுக்கு ஒன்றும் ஆகாது. அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்றார்.

எனது சந்ததியே கடமைப்பட்டிருக்கிறது
டெல்லியில் இருந்து உடனடியாக கிளம்பி நேரடியாக மருத்துவமனைக்கு வந்தார். என் உயிரை இங்கு வந்து அவையில் நிறுத்தி வைத்திருக்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியை அவர்களது பாதங்களில் சமர்ப்பிக்க கடமைப்பட்டிருக்கிறேன். எனது சந்ததி முழுவதும் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் காமராஜ் கண்ணீர் மல்க பேசினார்.

ஜெயலலிதா ஆசி இருக்கிறது
அதனைத் தொடர்ந்து பேசிய சட்டப் பேரவைத் தலைவர் தனபால் கூறுகையில், 'கொரோனா தொற்றால் அமைச்சர் பாதிக்கப்பட்டது அறிந்து வேதனை அடைந்தேன். குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தேன். இப்போது அவர் குணமடைந்து இந்த அவையில் பதிலளித்துள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இறைவன் இருக்கிறான். ஜெயலலிதாவின் ஆசி இருக்கிறது. முதல்வரின் பாசம் இருக்கிறது. துணை முதல்வரின் நேசம் இருக்கிறது. நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என எனது சார்பிலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications