அண்ணாமலை மீது நடவடிக்கை.. ஆலோசனை நடக்குது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பரபர தகவல்!
சென்னை : பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டிற்கு தகுந்த ஆதாரத்தை அவர் இன்னமும் சமர்ப்பிக்கவில்லை, முதல்வரின் அனுமதி பெற்று அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டக டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் அண்ணாமலை கூறிய நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. அண்ணாமலை கூறிய பொய் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆய்வு
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலூர் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி மாணவ மாணவிகளுக்கு போடப்படும் கொரோனா தடுப்பூசி குறித்தும் கேட்டறிந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 சதவீதமாக உள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு எண்ணிக்கை 93 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் அதிக அளவு தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையில் புதுக்கோட்டை மாவட்டம் முன்னணி வகிக்கிறது எனத் தெரிவித்தார்.

நீட் தேர்வு
மேலும் பேசிய அவர், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தொடர்ச்சியாக அனைத்து முயற்சியையும் தமிழக முதல்வர் எடுத்து வருகிறார். தமிழக ஆளுநரிடமிருந்து நீட் விளக்கு மசோதா குடியரசு தலைவருக்கு சென்றுள்ளது குடியரசுத் தலைவரும் உள்துறை அமைச்சகமும் இணைந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுத்து அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் தற்போது தேர்வு நெருங்கி விட்டது
அவர்கள் பள்ளிக்கல்வித் துறை மூலமாக நன்கு பயிற்சி பெற்றுள்ளதால் அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கஞ்சா தடுப்பு
கடந்த பத்து ஆண்டுகளில் கஞ்சா விற்பனை என்பது அனைத்து இடங்களிலும் பரவலாக நடைபெற்று வந்தது. இதனை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பதற்காகத்தான் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு அதனை எடுத்துச் சென்றோம். அதற்காக எங்கள் மீது வழக்கு போடப்பட்டு அந்த வழக்கு தற்போது தள்ளுபடி ஆகிவிட்டது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடந்த ஓராண்டில் 3364 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். 5849 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழு
மேலும் அதிமுக பொதுக்குழு பற்றி பேசிய மா.சுப்பிரமணியன், 10 பேர் ஒன்று கூடினால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட உள்ள நிலையில் அவர்களது கட்சிக்காரர்களை காப்பாற்றும் பொறுப்பு கட்சித் தலைமைக்கு உண்டு. கட்டாயம் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை
தொடர்ந்து பேசிய மா.சுப்பிரமணியன், அண்ணாமலை எந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்படும் என்று கூறினாரோ அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. ஆவினிலும் அவர் கூறியது போன்று ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கப்படவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டிற்கு தகுந்த ஆதாரத்தை அவர் இன்னமும் சமர்ப்பிக்கவில்லை. துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆலோசனை செய்து வருகிறார்கள். தமிழக முதல்வரிடம் கலந்து பேசி அண்ணாமலை மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ரெய்டு
மேலும், முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்டு வரும் ரெய்டு பற்றிய கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் அடிப்படையில் ஆதாரத்தின் அடிப்படையில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications