கோபம்.. காய்ச்சல் முகாமிலிருந்து விறுவிறுவென வெளியேறிய மா. சுப்பிரமணியன்.. மருத்துவர்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற காய்ச்சல் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கோபத்தில் பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக இன்ஃப்ளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. முதலில் இந்தக் காய்ச்சலால் குழந்தைகளுக்கு மட்டுமே அதிக பாதிப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அடுத்த சில நாட்களிலேயே பெரியவர்களும் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகினர்.
இதனால் சென்னை, கோவை, மதுரை, நெல்லை என தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாருங்க நம்ம மனுஷங்க பண்ண வேலைய.. செவ்வாய் கிரகத்தையும் குப்பையாக்கிட்டாங்க பாஸ்.. 7 ஆயிரம் கிலோவாம்
மருத்துவர்கள் அறிவுறுத்தல்
திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி போன்ற அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவக் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடனடி கவனம்
குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு இந்த இன்ஃபுளூயன்சா காய்ச்சல் அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
காய்ச்சல் முகாம்கள்
இதனிடையே, காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் மருத்துவமனைகள் என மொத்தம் உள்ள 11,333 மருத்துவமனைகளில் மருந்துகள் வழங்க சுகாதாரத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
கோபமாக வெளியேறிய அமைச்சர்
இந்நிலையில், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு காய்ச்சல் முகாம் பயிற்சிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அங்கிருந்த நிர்வாகிகளிடம், "நிகழ்ச்சியை பிறகு என்றாவது நடத்திக் கொள்ளலாம்" எனக் கூறிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் அங்கிருந்து கோபமாக வெளியேறினார். இதனால் அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பயிலரங்கில் மிகக் குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களும் செவிலியர்களும் பங்கேற்றதே அமைச்சர் வெளியேற காரணம் எனக் கூறப்படுகிறது.