சிஎம்டிஏ சிஇஓ பதவி 44 வருசமா இருக்கு.. அண்ணாமலை சொல்வது பொய்.. அமைச்சர் முத்துசாமி பரபர பிரஸ் மீட்!
சென்னை: சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.
Recommended Video
சிஎம்டிஏவில் சிஇஓ பதவி புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை கூறுவது முற்றிலும் தவறானது. கடந்த 1978-ஆம் ஆண்டில் இருந்து சிஎம்டிஏவில் சிஇஓ பதவி இருந்து வருகிறது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், கோவையில் 122 ஏக்கரில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது 2021 ஜனவரியில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இந்த ரணகளத்திலும்... நபிகள் நாயகம் அவதூறு பரபரப்புக்கு மத்தியில் இந்தியா வந்த ஈரான் அமைச்சர்
அண்ணாமலை விமர்சனம்
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் ஊழல் பட்டியல் எனக் கூறி சில புகார்களைத் தெரிவித்தார். அப்போது அவர், ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக தற்போது சிஎம்டிஏ மாறியிருக்கிறது.பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு 8 நாட்களில் டிடிசிபி அப்ரூவல் கிடைத்துள்ளது. அமைச்சர் முத்துசாமி இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
தவறான விமர்சனம்
இந்நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, சி.எம்.டி.ஏ சி.இ.ஓ பதவி தொடர்பாகவும், ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி தொடர்பாகவும் பதிலளித்தார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் தவறானவை என அமைச்சர் முத்துசாமி மறுத்துள்ளார்.
சி.இ.ஓ பதவி
அமைச்சர் முத்துசாமி பேசுகையில், "சிஎம்டிஏவில் சிஇஓ பதவி புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை கூறுவது முற்றிலும் தவறானது. கடந்த 1978-ஆம் ஆண்டில் இருந்து சிஎம்டிஏவில் சிஇஓ பதவி இருந்து வருகிறது. 40-க்கும் அதிகமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சி.இ.ஓ.வாக இருந்துள்ளனர். அ.தி.மு.க ஆட்சியில் கடைசி இரண்டு ஆண்டுகளாக சிஇஓ பதவி நிரப்பப்படாமல் இருந்தது. அதை தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நிரப்பியது. சி.இ.ஏ பதவி வேண்டாம் என்றால் அரசே அதை நீக்கியிருக்கும்.
ஜி ஸ்கொயர்
அண்ணாமலை கூறுவதுபோல் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு 3 நாட்களிலோ, 6 நாட்களிலோ அனுமதி வழங்கப்படவில்லை. கோவையில் 122 ஏக்கரில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது 2021 ஜனவரி மாதத்தில், அதாவது அ.தி.மு.க ஆட்சியில். எங்கள் ஆட்சிக்கும், அந்த அனுமதிக்கும் சம்பந்தமில்லை. ஜி ஸ்கொயர் என்ற நிறுவனம் நேரடியாக சிஎம்டிஏ-விடம் எந்த நிலத்திற்கும் ஒப்புதல் பெற விண்ணப்பிக்கவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில்தான் சில அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒற்றைச் சாளர முறை
முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வீட்டு வசதித் துறையில் ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒற்றைச் சாளர முறையில் ஏப்ரல் மாதம் முழுவதும் ட்ரையல் அடிப்படையில் ஒப்பந்தம் விண்ணப்பிக்கும் முறை நடைபெற்றது. பின்னர், அதன் குறைகளை நிவர்த்தி செய்து மே 10-ம் தேதி முதல் ஆன்லைனில் கட்டிட அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு காலம் ஆகியுள்ளது
ஜூன் 5ஆம் தேதி 92 மனுக்கள் ஆன்லைன் மூலமாக சி.எம்.டி.ஏவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் பணிகள் முடிந்தவுடன் ஒற்றை சாளர முறை மூலமே அனைத்திற்கும் அனுமதி வழங்கப்படும். ஒற்றை சாளர முறையை முழுமையாக கொண்டுவர ஓராண்டுகாலம் ஆகியுள்ளது.
அலுவலர்கள் மூலமே அனுமதி
கோவை, ஓசூர், திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்படும். சிஎம்டிஏவில் ஒற்றை சாளர முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி கட்டடத்திற்கு அமைச்சர் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அலுவலர்களே முடிவு செய்து அனுமதி வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்படி நடக்கிறதா
யாருக்கு அனுமதி கொடுக்கிறோம் கொடுக்கவில்லை என்பது முக்கியமில்லை. சட்டப்படி நடக்கிறதா என்பதே முக்கியம். கருணாநிதி அருங்காட்சியகம் திருவாரூரில் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் சில குறைபாடுகள் இருந்தன. கட்சி சார்பாக நடைபெறும் இந்தப் பணி தொடர்பாக முதல்வரே அழைத்து சட்டப்படி அனுமதி பெற்ற பிறகு பணியை ஆரம்பியுங்கள் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.