எடப்பாடி சொன்னது முழு பொய்.. பேனர் செலவு ரூ.611.. அதிமுக ஆட்சியில் தான் ஊழல்.. வறுத்தெடுத்த அமைச்சர்
சென்னை : பேனர் ஊழல் புகார் சர்ச்சை தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி சொல்வது பொய்யான குற்றச்சாட்டு, பேனர் ஒன்றுக்கு ரூ.611 மட்டுமே செலவு செய்யப்பட்டது என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் தமிழக ஆளுநரைச் சந்தித்து மனு அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, உள்ளாட்சி துறையில் ஒரு விளம்பர பேனர் அடித்ததற்கு 7,906 ரூபாய் பில் போட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி சுமத்திய இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் செய்தியாளர்களைச் சந்தித்து இன்று விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. பேனர் ஒன்றுக்கு ரூ.611 மட்டுமே செலவு செய்யப்பட்டது, ஒரே நிறுவனத்துக்கு பேனர் அடிப்பதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது பொய் எனத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.. “பொய் என நிரூபிப்போம்”.. அமைச்சர் பெரியகருப்பன் ஆவேசம்!
ஈபிஎஸ் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார். அப்போது திமுக அரசு மீதான புகார் தொடர்பான மனுவை ஆளுநரிடம் அளித்ததாகத் தெரிவித்தார் ஈபிஎஸ். செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாடு முழுவதும் மெகா ஊழல் நடந்திருக்கிறது எனக் குற்றம்சாட்டினார்.
பேனர் ஊழல்
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டில் இருக்கும் பணிகளை விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த பேனர் விலை 350 ரூபாய். அதற்கு 7,906 ரூபாய் பில் போட்டிருக்கிறார்கள். அரசு இந்த பேனர் அச்சிடும் ஒப்பந்தத்தை ஒரே கம்பெனிக்கு கொடுத்திருக்கிறது என்றும், உள்ளாட்சி துறையில் மெகா ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் விளக்கம்
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். அப்போது பேசிய அவர், ஒரு பேனருக்கு ரூ.7,906 செலவு என கூறுவது முற்றிலும் தவறு. ஒரு பேனருக்கு ரூ.611 மட்டுமே செலவு செய்யப்பட்டது. முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் இன்றி
மேலும், ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேனர் அச்சிட ஆணை வழங்கப்பட்டதாக கூறுவது தவறு. 'நம்ம ஊரு சூப்பர்' பேனருக்கான நிதியை ஊராட்சி மன்ற தலைவர்கள் தான் வழங்கியுள்ளனர். அதற்கான டிசைனை மட்டுமே அரசு வழங்கியது. மெகா ஊழல் என அடிப்படை ஆதாரம் இன்றி எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுகிறார் எனத் தெரிவித்தார்.
படுகொலை செய்தது
மேலும் பேசிய அவர், உள்ளாட்சிகளின் அதிகாரத்தைப் பிடுங்கியது இந்த அரசு என்று ஈபிஎஸ் சொல்லி இருக்கிறார். அது யாருக்குப் பொருந்தும் என்று அனைவருக்கும் தெரியும். உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தாமல் ஜனநாயகப் படுகொலை செய்தது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தான். முறையாக தேர்தலை நடத்தாததால் மத்திய அரசு தர வேண்டிய நிதிகளை பெற முடியாமல் போனது.
உங்க ஆட்சியில் தான்
உள்ளாட்சியில் முடிக்கப்பட்ட பணிகளை பற்றி விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது பொய். அதிமுக ஆட்சியில் தான் அத்தகைய விளம்பரங்களைச் செய்துள்ளனர். தற்போது, தூய்மை இயக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவே இந்த விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பத்து மடங்கு பில்
அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் பேனரில் கூட ஊழல் செய்திருக்கிறார்கள். ரூ. 2,800 மதிப்பிலான பேனர்களை அனைத்து ஊராட்சிகளிலும் நிறுவினார்கள். அதற்கு போடப்பட்ட தொகை ரூ.28,000. எதை செய்தாலும் 10 மடங்கு உயர்த்திதான் செய்திருக்கிறார்கள். அதேபோல, ரூ.500 பல்பிற்கு ரூ.5,000 என பில் போட்டது எடப்பாடி பழனிசாமி அரசு.
கூட இருந்தே குழி
ஊழல் செய்வதையே முழுநேரமாக செய்து வந்தவர்கள் அவர்கள். மாநில அரசு பெற வேண்டிய நிதிகளை பெற முடியாமல் கேடு விளைவித்த ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. பேனர் விவகாரத்தில் தவறான தகவலை எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கியவர்கள் யார் என்பதை உணர்ந்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்ள வேண்டும், அவர்கள் கூட இருந்தே குழி பறிப்பவர்களாகத்தான் இருப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.