‘டாக்டர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன்..’ - கல்லூரி நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி சொன்ன விஷயம்!
சென்னை : நான் பி.யூ.சி படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்று நினைத்துத் தான் படித்தேன் என அமைச்சர் பொன்முடி, தனியார் கல்லூரி நிகழ்வு ஒன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும். மூன்றாவதாக இன்னொரு மொழியை படிக்க வேண்டுமென்றால் தாராளமாக படித்துக் கொள்ளலாம். ஆனால் அதை கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மத்திய கல்வித்துறை இணையமைச்சர் என்பதால், சுபாஷ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

டாக்டர் ஆக விரும்பினேன்
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், "நான் கூட பி.யூ.சி படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்று நினைத்து தான் படித்தேன். இன்று தமிழ்நாட்டில் அதிகளவில் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான். பெண்கள் படிக்க இயலாத காலம் இன்று மாறியிருக்கிறது. காலத்துக்கேற்ற வகையில், பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். எந்தத் துறை மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் Inter Disciplinary படிப்புகளைக் கற்க வேண்டியது அவசியம்.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்
மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க, ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும். புதுமைப் பெண் திட்டம், 7.5% இட ஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி நிறுவனங்கள்
மதம், மொழி, இனத்தை சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதற்காகவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தனியாக தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர் காலம் முதல் கிறிஸ்தவ மிஷனரிகள் தான் பலரையும் படிக்க வைத்து வருகின்றனர். சிறுபான்மை சமுதாயமும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பதே திராவிட மாடல் ஆட்சி." எனப் பேசினார்.

இருமொழிக் கொள்கை தான்
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "தாய்மொழி தமிழும், சர்வதேச மொழியான ஆங்கிலமும் இருக்கும்போது பிற மொழிகள் எதற்கு? மூன்றாவதாக இன்னொரு மொழியை படிக்க வேண்டுமென்றால் தாராளமாக படித்துக் கொள்ளலாம். ஆனால் அதை கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும்.

மாநிலக் கல்விக்கொள்கை
பள்ளிகளில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அப்படி பொதுத் தேர்வு கொண்டுவந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். 10, 12-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு இருந்தால் போதுமானது. விரைவில் தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்படும்.

சுபாஷ் சர்க்கார்
தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. புதிய கல்விக் கொள்கையை எதற்காக எதிர்க்கிறோம் என மத்திய கல்வி அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளோம். மத்திய கல்வித்துறை இணையமைச்சர் என்பதால், சுபாஷ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை" எனத் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications