"தமிழகத்தில் எப்போதும் 69% இட ஒதுக்கீடு தான்!" ரிசர்வேஷன் குறித்து பாடமெடுத்த அமைச்சர் பொன்முடி
சென்னை: மதுரை அரசு பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி சேர்க்கையில் 10% இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என வெளியான தகவலுக்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இப்போது 69% இட ஒதுக்கீட்டு முறைப் பின்பற்றப்படுகிறது. அதாவது பிசி பிரிவினருக்கு 30 சதவீதமும், எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீதமும் வழங்கப்படுகிறது.
அதேபோல எஸ்சி பிரிவினருக்கு 18 சதவீதமும், எஸ்.டி பிரிவினருக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகவே இந்த இட ஒதுக்கீடு முறையே பின்பற்றப்படுகிறது.

10% இட ஒதுக்கீடு
இந்தச் சூழலில் தான் கடந்த 2019 ஜனவரி மாதம் மத்திய அரசு, பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது. மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் அந்த ஆண்டில் இருந்தே இந்த 10% இட ஒதுக்கீட்டு சேர்க்கப்பட்டது. மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை அந்தந்த மாநில அரசுகளே பின்பற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

மதுரை பல்கலைக்கழகம்
தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். சமீபத்தில் இந்த பல்கலைக்கழகத்தில் முதுநிலை பயோடெக்னாலஜி பிரிவில் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதி இருந்தார்.

அமைச்சர் பொன்முடி
இந்தச் சூழலில் மாநிலத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீடு முறையே பின்பற்றப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "இந்த இட ஒதுக்கீடு குறித்து நான் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 69% இட ஒதுக்கீடு முறையைத் தான் பின்பற்ற வேண்டும்.

69% இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீட்டிற்காக முதல்வர் தனிக் குழுவையும் அமைத்துள்ளார், இந்த குழு இட ஒதுக்கீடு சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அனைத்தையும் மேற்பார்வையிட்டு வருகிறோம். சில துணைவேந்தர்கள் சில காரணங்களுக்காக இட ஒதுக்கீட்டில் வேறு விதமான அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். இதுகுறித்து செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியுள்ளது.

விளக்கம்
மதுரை பல்கலைக்கழகத்தில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக ஏற்கனவே சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் தெரிவித்துவிட்டோம். கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பயோடெக்னாலஜி படிப்பிற்கும் இதே போன்ற அறிவிப்பு வெளியானது. அப்போதே தமிழக முதல்வர் இது தொடர்பாக விளக்கத்தை அளித்திருந்தார். சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருந்தார்.

69% இட ஒதுக்கீடு
இப்போது தமிழக அரசு அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதில் தெளிவாக உள்ளோம். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்திலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சரியாகச் செயல்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்ப உள்ளோம்.

அமைச்சர் விளக்கம்
அதிலும்கூட 37 சதவிகிதம் என்பது ஓசி அதாவது பொதுப்பிரிவினருக்கு. இதில் அனைத்து பிரிவினரும் மதிப்பெண் அடிப்படையில் இடங்களைப் பெறலாம். அதாவது பிசி, எஸ்சி பிரிவினர் அதிக மதிப்பெண்களைப் பெற்று இருந்தால் இட ஒதுக்கீட்டிற்குப் பதிலாகப் பொதுப்பிரிவிலேயே இடத்தை பெறலாம். ஆனால் சில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பொதுப்பிரிவினர் என்பதற்குப் பதிலாக இதர பிரிவினர் என்று குறிப்பிட்டு.. இட ஒதுக்கீடு வரம்பிற்குள் வராதவர்களுக்கு மட்டுமே இதை ஒதுக்குகிறார்கள். இது தவறு அந்த 31 சதவீதத்தில் எந்த பிரிவினரும் சேரலாம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications