'நாங்கள் செஞ்ச இந்த ஒரு விஷயம்.. வரலாற்றில் இல்லாத அளவுக்கு உதவியது..' அமைச்சர் பிடிஆர் பெருமிதம்
சென்னை: சட்டசபை கூட்டத்தொடரில் கணினி பயன்பாடு காரணமாக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உறுப்பினர்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் இதன் மூலம் விவாதங்களில் புள்ளி விவரத்துடன் பேச உறுப்பினர்களுக்குக் கணினி பேருதவியாக இருந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதல்முறையாகக் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபை நடவடிக்கைகள் மெல்லக் காகிதமில்லாத முறைக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டைக் குறைத்து இணையதளம் மூலமாகக் கோப்புகளைக் கையாண்டு பொதுமக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்கும் விதமாக e-office எனும் மின் அலுவலக பயிற்சி வகுப்பு அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்த அதிரடி.. அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பிடிஆர்
கணினி பயிற்சி
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக வழங்கப்படும் இப்பயிற்சி வகுப்பு தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 3,645 அலுவலர்களுக்கு இன்று தொடங்கியது. 120 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி வகுப்பினை அண்ணா சாலை செங்கல்வராயர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
ஐடி என்றால் சமூக வலைத்தளம் மட்டுமல்ல
அப்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "வரலாறு , தொழில்நுட்பம் படித்தோருக்கு இங்கிலாந்தில் முதன்முறையாக நடைபெற்ற தொழிற்புரட்சி பற்றித் தெரியும். நீராவி தொழில்நுட்பம் முதலில் அரசி அரைக்கவும் பின்னர், துணி உற்பத்திக்கு உதவியது. பின்னர் அதே தான் ரயில்வே துறைக்கு உதவியது. மின்சாரம் வந்த பிறகு தொழில் புரட்சி மேம்பட்டது. தகவல் தொழில்நுட்பத்தின் பயனை முழுமையாகத் தெரிந்தவன் நான். அதனால் தான் ஐடி என்றால் வெறும் சமூக வலைத்தளங்கள் மட்டும் அல்ல என்று கூறி, அனைத்து கட்டமைப்புகளுடன் கூடிய திமுகவில் ஐடி விங்கை உருவாக்குமாறு கூறினேன்.
இ சேவை மையம்
அமைச்சரான எனக்கு வரக்கூடிய கோப்புகளை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்துக் கையெழுத்திட நினைத்தால் அதற்குள் ஆட்சிக் காலம் முடிந்துவிடும். எனவே தகவல் நிரந்தரமாக அழியாமல் இருக்கக் கணினி பயன்பாடு அவசியம். இ-பட்ஜெட் தாக்கல் செய்த போது அவையில் பயன்படுத்திய டேப்லட்களை பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையம் தொடங்கலாம் என யோசனை கூறியுள்ளேன்.
வரலாற்றில் இல்லா அளவுக்குத் தகவல்கள்
கணினியின் அருமை கூட்டத் தொடரின்போது தான் அனைவருக்கும் புரிந்துள்ளது. அவை மேஜையில் முன்பெல்லாம் ஒவ்வொரு எம்எல்ஏ முன்பும் 300 -500 புத்தகம் வைக்கப்படும் . அதை யாரும் பெரிதாகப் படிப்பதில்லை. இப்போது அவையில் கணினியை வைத்த பிறகு , வரலாற்றில் இல்லாதளவு அதிகபட்ச தகவல் உறுப்பினர்களின் கைக்கே வந்து விட்டது , விவாதத்தில் தகவல்களுடன் பேச உதவுகிறது.
கணினி முக்கியம்
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் வரி 3 ரூபாய் குறைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் எனத் தெரிந்து கொள்வதற்கான தகவலைப் பெறுவது கடினமாக இருந்தது. காரணம் வரி வருவாய் குறித்த தகவல் கணினியில் இல்லை. பின்பு ஆகஸ்ட் 1 முதல் 13 வரை எண்ணெய் விற்பனை குறித்து தகவலைத் திரட்டினோம். இப்படி அனைத்து வகை நிர்வாக மேலாண்மைக்கும் கணினி அவசியம், குறிப்பாகத் தலைமைச் செயலகத்தில் இல்லை என்றால் அரசியல்வாதிகளுக்கு பெரும் பதிப்பு ஏற்பட்டுவிடும். இந்தியாவில் சிறந்த மாநிலமாக உள்ள தமிழகத்தைக் கொண்டு வர இதுபோன்ற திட்டம் அவசியம்" என்று அவர் குறிப்பிட்டார்,
e-office திட்டம்
அதன் பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், " தமிழகத்தில் e-office திட்டம் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என விரும்புகிறோம். நிதி மேலாண்மை குறித்த உலகளாவிய அறிவும் அனுபவமும் கொண்டவர் பழனிவேல் தியாகராஜன். இந்தியாவில் இவரைப் போன்ற நிதித்துறை அமைச்சர் இருந்திருக்க முடியாது. அரசு சார்ந்து சில முடிவுகளை எடுப்பதற்குச் சரியான தரவுகள் அவசியம், அதைக் கொண்டுவர நிதி அமைச்சர் முயன்று வருகிறார்.
இல்லம் தோறும் இ-சேவை
இல்லம் தோறும் இ-சேவை என்பதை முன்வைத்து வரும் ஜனவரிக்குள் இல்லங்களில் இருந்தவாறு அனைவரும் அரசின் சேவைகளைப் பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். நான் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான போது ஐடி என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. கணினி, செல்போனை ஓரளவு இயக்குவேன். அப்போது அவ்வளவுதான் எனக்குத் தெரியும். ஜனவரி அல்லது பிப்ரவரிக்குள் தலைமைச் செயலக நிர்வாகம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் " என்று கூறினார்.