கோட்டையில் "அதுதானே" பறக்கும்.. காவிக் கொடி எப்படி பறக்கும்.. முருகனுக்கு உதயகுமார் நெத்தியடி!
கோட்டையில் தேசிய கொடி பறக்கும் என்று ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்
சென்னை: "செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடியா? அந்தந்த கட்சித்தலைவர்கள் அவரவர் கொடிகளை தூக்கிப்பிடிக்க உரிமை உள்ளது. அவர்களுடைய கட்சி கொடியை தூக்கி பிடிக்கதான் முருகனை தலைவராக நியமித்துள்ளனர்.. ஆனால், எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும்" என்று அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது பல்வேறு கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டது.. அவைகளுக்கு அமைச்சர் பதிலளித்து சொன்னதாவது:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.. வேளாண் மசோதாவை ஆதரித்து, முதல்வரும், பிரதமரும் துறை சார்ந்த அமைச்சரும் கருத்து தெரிவித்துள்ளனர்.. எதிர்க்கட்சிகள் எல்லா மசோதாக்களையும் எதிர்ப்பது போல விவசாய மசோதாவையும் எதிர்க்கின்றன. அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்று தெரியவில்லை. நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த விவசாய மசோதா உதவும்" என்றார்.
இதையடுத்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என எல்.முருகன் பேசியது குறித்த கேள்விக்கு, "எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும். அந்தந்த கட்சித்தலைவர்கள் அவரவர் கொடிகளை தூக்கிப்பிடிக்க உரிமை உள்ளது. அவர்களுடைய கட்சிக்கொடியை தூக்கிப்பிடிக்கதான் அவரை தலைவராக நியமித்துள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications