எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தெரியும்? செல்வபெருந்தகை மேட்டரை அப்புறமா பேசிக்கலாம்! சேகர் பாபு நச்!
சென்னை: வெள்ள நிவாரண பணிகள் குறித்து பேசுவதற்கு ஈபிஎஸ்க்கு எந்த அருகதையும் இல்லை எனவும், கொரோனா காலத்தில் களத்தில் இருந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர்," கோயம்பேடு வணிக வளாகத்துக்கு தினம் தோறும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகின்றனர். பொங்கல் உள்ளிட்ட அனைத்து பண்டிகை காலங்களில் இதன் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்கிறது.

சேகர்பாபு
எனவே இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க,சாலை மேம்படுத்துதல்,சந்தையை மேம்படுத்தும் நோக்கில் 40 கோடி ரூபாய் செலவில் 4 மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டது, இதில் 70% பணிகள் முடிவடைந்துள்ளது இந்த பணிகள் முடிந்த பின் தண்ணீர் தேங்கும் பிரச்சினை இருக்காது. தற்போது மழை நின்ற பின் விரைவாக டிசம்பர் மாதத்திற்கு முன் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முடிவடையும். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மாநகராட்சி சார்பில் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ள நிவாரணம்
செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடும்போது எல்லாம் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகையை அதிகாரிகள் அழைப்பது இல்லை என்று அவர் கடிந்து கொண்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்டோம். நிறைய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளோம். மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஓடிக் கொண்டுள்ளோம். சிறிய சிறிய சம்பவங்கள் பேசி தீர்க்கப்படும்.
செம்பரம்பாக்கம் ஏரி
அதனைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் பொதுப்பணித்துறையில் அயோக்கியன் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் என செல்வ பெருந்தகை பேசியது தொடர்பான செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க முற்பட்டபோது வேறு ஒருத்தர் கேள்வி கேளுங்கள் என பதிலளிக்க மறுத்தார் அமைச்சர் சேகர்பாபு.
ஈபிஎஸ்
மழையை ஒட்டி திமுக ஆட்சியை நம்பி எந்த பயனும் இல்லை எதிர்க்கட்சி தான் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு," ஆளும் கட்சியாக இருந்த நேரத்தில் என்ன சுழன்றார் என மக்கள் பார்த்தார்கள். கால் கூட தரையில் படாமல் அவர் பணி செய்தார். கொரோனா காலத்தில் உயிருக்கு பயந்து அனைவரும் வீட்டில் புகுந்து கொண்டிருந்த நேரத்தில், களத்தில் இருந்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின். வெள்ள நிவாரண பணிகள் குறித்து பேசுவதற்கு ஈபிஎஸ்க்கு எந்த அருகதையும் இல்லை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications