இடத்தையும் நேரத்தையும் முடிவு செய்யுங்கள்.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி சவால்
சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவர். அரைவேக்காட்டுத்தனமாக பேசி வருகிறார். தனது இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல், குற்றச்சாட்டி வரும் அண்ணாமலைக்கு தலையில் இருப்பது களி மண்ணா என அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக விமர்சித்தார்.
Recommended Video
பி.ஜி.ஆர் தனியார் நிறுவனத்திற்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்று கூறிய பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்தார்.
முன்னதாக மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு மையமான மின்னகத்தில் ஆய்வு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்பேசும் போது,

மின்னகம்
"மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் துவங்கப்பட்டு மின்துறை சார்ந்த பொதுமக்கள் புகார்கள் பெறப்பட்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இதுவரை 4,14,152 புகார்கள் பெறப்பட்டு அதில் 4,06,846 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

7000 சாய்ந்த மின் கம்பங்கள்
98 விழுக்காடு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை 25,292 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 700 பில்லர் பாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. அதுபோல 7000 சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. 3337 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது.

93000 மின் கம்பங்கள்
கன்னியாகுமரியில் மழையினால் 101 மின்மாற்றிகளில் 14 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளது. அவற்றை சரிசெய்ய மதுரையிலிருந்து மின் மாற்றிகள் கொண்டுவரப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய 93,000 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது என்று அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது.

அரசியல் அரிச்சுவடி
தனியார் நிறுவனத்திற்கு சிறப்பு சலுகை வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து தெரியவில்லை என்றால் தெரிந்து கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலை பேச வேண்டும் என்று தெரிவித்தார். அவரை போல சமூக வலைதளத்தில் மட்டும் பணி செய்பவன் நான் இல்லை. பொது வாழ்வில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். அண்ணாமலைக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாது. தலையில் களிமண் மட்டும் தான் உள்ளது. அரைவேக்காட்டுத்தனமாக ஆதாரமில்லாமல் கண்டபடி உளறி வருகிறார். அவருக்கு மண்டையில் சரக்கு ஒன்றும் இல்லை.

மன்னிப்பு கேளுங்கள்
பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் மின்சார கொள்முதலில் ஊழல் என்று கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இனிமேல் ஆதாரத்துடன் மட்டுமே அரசின் மீது குற்றச்சாட்டுகள் வைக்க வேண்டும். ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை போன்றவர்கள் குற்றச்சாட்டுகளை வைத்தால், அதற்கு இனிமேல் பதில் கூற போவதில்லை. அண்ணாமலை வைத்த குற்றச்சாடு தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் ஆதாரத்தை வெளியிடாவிட்டால், கட்டாயமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இடத்தை சொல்லுங்க
அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க களத்தில் நேருக்கும் நேர் சந்திக்கவும் தயார், அவரை போல சமூக வலைதளங்களில் விளையாடவும் தயார். இடத்தையும் நேரத்தையும் முடிவு செய்து விட்டு சொன்னால், விவாதிக்க தயார்" இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications