எதுக்கு எதிரி.. தூக்கி உள்ளே போடு.. கருணாநிதி ஸ்டைலில் ஸ்டாலின்
சென்னை: வரவர செம மாஸ் காட்டி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்!! கிட்டத்தட்ட கருணாநிதி பாணிக்கே வந்துவிட்டார்!!
கருத்துவேறுபாடு காரணமாக யார் தன்னை விட்டு பிரிந்து சென்றாலும், உடனே அவர்களை கூப்பிட்டு தன் பக்கம் இழுத்து கொள்வார் மறைந்த தலைவர் கருணாநிதி.
அது கட்சி நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, தொண்டர்களாக இருந்தாலும் சரி. அதனால்தான் 50 வருடம் அவரால் தன் கட்சி தலைவராக நீடிக்க முடிந்தது.
மூத்த நிர்வாகிகள்
இதே பாணியைதான் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். கட்சியின் 2-வது தலைவராக பதவி ஏற்ற உடனேயே பிரிந்து சென்ற கட்சியின் மூத்த நிர்வாகிகளை அழைத்து கொண்டார். கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தனை கூப்பிட்டபோது, இந்த விஷயம் பெரிதாக ஒன்றும் பார்க்கப்படவில்லை.
தன் பக்கம் இழுக்கிறார்
அப்போதைக்கு களேபரம் செய்து கொண்டிருந்த அழகிரிக்கு ஒரு ஷாக் கொடுக்கப்பட்டதாகவே பார்க்கப்பட்டது. ஏனென்றால் முல்லைவேந்தன் அழகிரியின் ஆதரவாளர் என்பதால்தான். ஆனால் உண்மையிலேயே ஸ்டாலின் இதை அழகிரிக்காக செய்யவில்லை. பிரிந்து சென்றவர்களை மீண்டும் தன் கட்சிக்கு அழைப்பது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும் தன் பக்கம் இழுக்கும் வேலையையும் பக்காவாகவும் சைலண்ட்டாகவும் செய்து வருகிறார்.
தேர்தல் வியூகம்
ஸ்டாலின் இந்த 100 நாட்களில், முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியனுக்கு அழைப்பு மட்டும் இல்லை, டிடிவி தினகரனுடன் மறைமுக ரகசிய உறவு இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு அவரது வியூகம் அமைந்துள்ளது. ஒரே ஹோட்டலில் சந்தித்து பேசினார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ பொய்யோ தெரியாது, ஆனால் செந்தில் பாலாஜியை இழுக்கும் முயற்சியையும் ஸ்டாலின் பக்காவாக பிளான் செய்ததாகவே கூறப்படுகிறது.
மாதிரி சட்டமன்ற கூட்டம்
இந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருப்பவர் கருணாஸ்தான்!! கருணாஸ் இப்போது யார் பக்கம் இருக்கிறார் என்றே தெரியவில்லை. கடந்த மே 30-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்ற கூட்டத்தில் கருணாஸ் கலந்து கொண்டார்.
நேரில் சந்தித்தார்
ஒரு கட்சி தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டிருப்பார் என நினைக்கப்பட்டது. பிறகு சர்ச்சையாக பேசிவிட்டு ஜெயிலுக்கு போய் திரும்பவும் வெளியே வந்தவுடன், கருணாஸ் ஸ்டாலினைதான் சென்று பார்த்தார். அதேபோல, தற்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கும் கருணாசுக்கு அழைப்பு போயுள்ளது.
அபாரமான அணுகுமுறை
இதெல்லாம் அரசியல் நாகரீகம் கருதி நடந்ததா? அல்லது கருணாஸ் ஒரு கட்சி தலைவர் என்ற முறையில் நடந்ததா? என தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் மற்ற கட்சியினரை தன் பக்கம் இழுப்பதில் ஸ்டாலினின் அணுகுமுறை அபாரமாகவே உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.