கேபி அன்பழகன் வீட்டில் அதிரடி ரெய்டு.. சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் "சிக்கிய" பொள்ளாச்சி ஜெயராமன்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனின் உறவினர் வீட்டின் கதவை தட்டிய போது அங்கிருந்து அதிமுக முன்னாள் துணை சபாநாயகரும் எம்எல்ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே பி அன்பழகன். இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர்.
கே பி அன்பழகனின் வீடு மற்றும் அவர்களது உறவினர்களின் வீடு, அலுவலகம் என சுமார் 57 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. கே பி அன்பழகன், அவரது மனைவி, அவரது மகன்கள், மருமகள் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம்
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கே பி அன்பழகன் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்வதற்காக இன்று காலை அங்கு சென்றனர். அப்போது அந்த வீட்டின் கதவை கட்டிய போது அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கதவை திறந்தார்.

குடியிருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன்
அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு பொள்ளாச்சி ஜெயராமன் இந்த வீட்டில் தான் குடியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி முடியும் வரை பொள்ளாச்சி ஜெயராமனை வெளியே செல்ல விடவில்லை என கூறப்படுகிறது. அவரை யாரிடமும் பேசவிடாமல் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

விஷயம்
இந்த ரெய்டு முடிந்தவுடன் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், துணை சபாநாயகராக இருந்த வீட்டை நான் காலி செய்த போது முதல் இந்த நுங்கம்பாக்கம் அபார்ட்மென்டில் குடியிருந்து வருகிறேன். எனது வீட்டிற்கு மாற்று உடையில் வந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனையிட வேண்டும் என்றனர். நான் எதற்கு என கேட்டதற்கு அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சொல்லவில்லை.

எந்த பொருளும்
இந்த வீட்டில் சோதனை முடிந்தவுடன் எந்த ஒரு பொருளையும் நாங்கள் கைப்பற்றவில்லை என எழுதி கையெழுத்திட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். சும்மா மிரட்டி பார்ப்பதற்காகவே இது போல் அவர்கள் சோதனை நடத்தியிருக்கிறார்கள். நான் அதிமுகவில் தேர்தல் பிரிவு செயலாளராக உள்ளேன். நான் குடியிருக்கும் வீட்டில் சோதனை இடுவதன் மூலம் அதிமுகவுக்கு பீதியை ஏற்படுத்தும் செயலாகவே நான் கருதுகிறேன்.

25 ஆண்டுகள்
எனது செல்போனை வாங்கி வைத்துக் கொண்டனர். நான் தொடர்ந்து 25 ஆண்டுகளாக சட்டசபை உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றி வருகிறேன். இரு முறை அமைச்சராகவும் இரு முறை சட்டசபை துணை தலைவராகவும் பணியாற்றியுள்ளேன். இதற்கு மரியாதை கொடுத்து அவர்கள் திரும்பி போயிருக்கலாம். ஆனால் வேண்டுமென்றே நான் குடியிருக்கும் வீடு என தெரிந்தே சோதனை நடத்தப்பட்டது. இப்ப என்ன செய்தார்கள் ஒன்றையும் எடுத்துச் செல்லவில்லை என்றார் பொள்ளாச்சி ஜெயராமன்.












Click it and Unblock the Notifications