"தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும்!" செங்கோட்டையன் அதிரடி உரை! மேஜையை தட்டிய திமுக எம்எல்ஏக்கள்
சென்னை: தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும் என அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். இதனை திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன் பேசினார்.
அவர் கூறுகையில் தமிழகத்தை திராவிட இயக்கங்கள்தான் ஆளும். வேறு எவராலும் தமிழகத்தை ஆள முடியாது என்றார். அப்போது திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

பாஜக
தமிழகத்தை பாஜக ஆளும் என கூறி வரும் நிலையில் தேசிய அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக தமிழகத்தை திராவிட இயக்கங்களை தவிர வேறு எவராலும் ஆள முடியாது என கூறியுள்ளது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இது பாஜகவினருக்கு அதிருப்தியையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

நகராட்சி தேர்தல்
நகராட்சி தேர்தலுக்கு முன்னர் அதிமுகவுடன் பாஜக கூட்டணியிலிருந்த போது திமுக வெர்சஸ் பாஜகவுக்குதான் போட்டி என்றும் திமுகவுக்கு மாற்று பாஜக என்றும் அதன் தலைவர்கள் கூறி வந்தனர். மேலும் அதிமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தனர். பாஜகவின் நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்களை தரக்குறைவாக பேசியிருந்தார்.

நீண்ட காலம்
இந்த நிலையில்தான் நகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு தொகுதியை ஒதுக்காமல் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக தனித்து போட்டியிட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர் என்ற விமர்சனம் உள்ளது.

ராகுல் காந்தி
அதற்கு முத்தாய்ப்பாக தமிழகத்தை வேறு யாருமே அதாவது பாஜக ஆள முடியாது என்பதை மறைமுகமாக அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் கூறியிருப்பதும் அதை திமுகவினர் வரவேற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications