2500 ரூவா எங்கே?.. கொரோனாவுக்கு குடுத்த 4000த்துல கழிச்சுக்கணுமா?.. திமுக அரசுக்கு மநீம சுளீர்
சென்னை: பொங்கலுக்கு ரூ 2500 கொடுக்காதது குறித்து திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நீதி மய்யம் அதை கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்ட ரூ 4000 இல் கழித்து கொள்ள வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து கொரோனா நிவாரணமாக ரூ 4000 த்தை இரு தவணைகளாக வழங்கியது. அதே வேளையில் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கிவிட்டது.
திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன?
இந்த நிலையில் வரும் பொங்கலுக்கு 20 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படுகிறது.
பொருட்கள்
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய 20 பொருட்கள் துணிப்பையுடன் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 2,15,48,060 குடும்பங்களுக்கு ரூ. 1088 கோடி நிதியில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
பண்டிகை
கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையின் போது பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், திராட்சை, ஒரு துண்டு கரும்பு, ரூ 2500 ரொக்கமும் வழங்கியது. இதன் மூலம் 2.06 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றனர். அதே போல் திமுகவும் பொங்கலுக்கு 2500 ரூபாய் தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
ஓபிஎஸ்
அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் 2500 ரூபாய் தர வேண்டும் என சமூகவலைதளங்களிலும் அதிகமாகி வருகிறது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தமிழக அரசுக்கு சுளீர் கேள்வி எழுப்பியுள்ளது.
மநீம கோரிக்கை
இதுகுறித்து அக்கட்சியின் ஊடகப் பிரிவின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மக்கள் : "சென்ற ஆட்சியில் பொங்கலுக்கு 2500 ₹ கொடுத்தாங்களே. நீங்க இல்லேங்கறீங்க.'
அரசு : "நாங்க கொரோனா நிவாரணமா கொடுத்த 4000₹ த்தில இதை கழிச்சுக்குங்க " என தெரிவித்துள்ளார்.