விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.. 2024 தேர்தல் இலக்கு இதுதான்.. கமல்ஹாசன் பேச்சு!
சென்னை: 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வெற்றிகள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2021ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின் கட்சியின் பல்வேறு முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு மாறினர். கமல்ஹாசனும் அண்மைக் காலமாக கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல், சினிமா பயணத்தில் ஆர்வம் காட்டினார்.

இதனைத்தொடர்ந்து விக்ரம் படம் வெளியாகி கமல்ஹாசனுக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது. விக்ரம் படத்தின் வெற்றி கொடுத்த உத்வேகத்தில் கமல்ஹாசன், கட்சிப் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். இதில், துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது, மக்கள் நீதி மய்யம் முன்னெடுத்து செல்லவேண்டிய களப்பணிகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்தோடு பல கட்டங்களாக தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்க விரும்புவதாகவும், அந்த சுற்றுப்பயணத்துக்கான திட்டமிடலை விரைவுபடுத்தவும் நிர்வாகிகளை கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதனால் விரைவில் கமல்ஹாசனின் சுற்றுப்பயணம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வெற்றி பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மாநில, மண்டல, மாவட்ட பொறுப்புகள் தொடங்கி பூத் கமிட்டி வரையிலான பொறுப்புகள் அனைத்தும் நியமிக்கப்படுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் கடுமையாக உழைக்கவேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இனி கூடும்போது, மேகதாது அணை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்றும், கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில், மாற்று கருத்து கொண்டோரின் டுவிட்டர் பக்கங்களை முடக்க முற்படும் மத்திய அரசை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் தமிழகத்தில் மாநில கல்வி கொள்கையை வரையறுப்பதற்கான முன்னெடுப்புகள் செய்திருப்பது வரவேற்புக்குரியது. இதற்காக அமைக்கப்பட்ட குழு, தமிழ் மொழியின் தொன்மை மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைகளை உள்ளடக்கிய கல்விக்கொள்கையை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications