அடமான பத்திரம்.. காலி மனை பட்டா வாங்கறீங்களா.. தமிழக பத்திரப்பதிவு துறையின் அடுத்த அதிரடியை பாருங்க
சென்னை: காலி மனை தொடர்பான பத்திரங்கள் குறித்து பத்திரப்பதிவு துறை முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் உடனடியாக வெளியாகி உள்ளது.
பத்திரப்பதிவு துறையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.. சமீபத்தில்கூட, மோசடி பத்திரங்கள் குறித்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருந்தது. அதன்படி, மோசடி புகார் குறித்து விசாரித்து, மாவட்ட பதிவாளரே அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம். இந்த விபரம் வில்லங்க சான்றிதழிலும் சேர்க்கப்படும் என்பதே அந்த திருத்தமாகும்.

இப்படி மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால், கிட்டத்தட்ட 1,055 மோசடி பத்திரங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டிருப்பதாக பதிவுத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
முளைத்த பிரச்சனை: ஆனாலும், பழைய நடைமுறைகளை சுட்டிக்காட்டி, மோசடி பத்திரங்களை ரத்து செய்ய கோரும் மனுக்களை, மாவட்ட பதிவாளர்கள் சிலர் தள்ளுபடி செய்துவிடுகிறார்களாம்.. இதுகுறித்த புகார்கள் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், மோசடி பத்திர ரத்து சட்டத்துக்கு எதிராக செயல்படும் மாவட்ட பதிவாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு உத்தரவை பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.. அதன்படி, காலி மனை பத்திரங்கள் பதிய நில புகைப்படம் கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம், தமிழகத்தில், காலி மனை பத்திரங்களை பதிவு செய்வதற்காக, கள ஆய்வு எதுவும் மேற்கொள்வதில்லை. சில இடங்களில், காலி மனை என்று குறிப்பிட்டு தாக்கலாகும் பத்திரங்களில், கட்டிடங்கள் மறைக்கப்படுவதால், பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அடுத்த உத்தரவு: அதனால்தான், இது தொடர்பாக சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முக்கிய உத்தரவை பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் உள்ளதாவது:
"பத்திரத்தில் கட்டிடம் தொடர்பான விபரங்களை மறைப்பதை தடுக்க, சம்பந்தப்பட்ட நிலத்தை எளிதில் அறியும் வகையில், புவியிட தகவல்கள் மற்றும் தேதியுடன், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, ஆவணத்தில் இணைக்க வேண்டும். இதை அனைத்து ஆவணதாரர்களும், ஆவணம் எழுதுவோரும் அறியும் வகையில் விளம்பரப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலி மனை பத்திரம்: காலி மனை பத்திரங்கள் பதிவுக்கு வரும்போது, முந்தைய ஆவணங்களில், கதவு எண், மின் இணைப்பு, குடிநீர், வடிகால் இணைப்பு எண், சொத்து வரி எண் குறிப்பிடப்பட்டு இருந்தால், கள ஆய்வு மேற்கொள்வது கட்டாயமாகும்.
முந்தைய ஆவணங்களில் வீட்டுக் கடனுக்காக ஆவண ஒப்படைப்பு அடமான பத்திரம் பதிவாகி இருந்தாலும், கள ஆய்வு கட்டாயம். முந்தைய ஆவணத்தில் வீடு இருப்பது குறிப்பிடப்பட்டு, அது இப்போது இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், அங்கு கள ஆய்வு செய்வது கட்டாயம்.. எனவே, சம்பந்தப்பட்ட நிலத்தின் புவியிட தகவல்கள், தேதியுடன் புகைப்படம் எடுத்து, களப்பணி அறிக்கையில் இணைக்க வேண்டும்.
பத்திரங்கள்: இந்த வழிமுறைகளை கடைபிடிக்காமல், கட்டிடம் இருக்கும் இடத்தை காலி மனையாக பதிவு செய்யும் அலுவலர்கள் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரங்கள் தொடர்பான தணிக்கையிலும், இந்த விதிகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா என, பார்க்க வேண்டும். பொது மக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்களுக்கு, இதை பதிவு அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications