பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்த பாஜக, பாமக எதிர்ப்பு.. அதிமுக நடுநிலை.. திமுக ஆதரவு- அன்பில் மகேஷ் தகவல்
சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவதற்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று பரவ காரணமாக சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், இந்த மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ கல்வி உள்ளிட்டவற்றுக்கு உயர் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்று தமிழக அரசு கருதுகிறது .
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் பொதுத்தேர்வு ரத்து செய்வதன் மூலமாக நீட் தேர்வை மட்டுமே நாடு முழுக்க சேர்க்கைக்கான தகுதியாக மத்திய அரசு கொண்டுவர நினைக்கிறது. இந்த சதி வலையில் தமிழகம் விழுந்துவிடக்கூடாது பொதுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி ராஜன் தலைமையில் குழு- முதல்வர் ஸ்டாலின்
கருத்து கேட்பு
அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து வரும் தமிழக அரசு பொதுத் தேர்வை நடத்துவதா வேண்டாமா என்பது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்தது. அதன் ஒருபகுதியாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
13 கட்சி பிரதிநிதிகள்
மேலும் , சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று காணொலிக் காட்சி மூலமாக அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதிமுக சார்பில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதில் பங்கேற்றார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் செல்வப்பெருந்தகை, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாலாஜி என சட்டசபையில் உறுப்பினர்களை கொண்டுள்ள 13 கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர் .
பாஜக எதிர்ப்பு
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த திமுக ஆதரவு அளித்துள்ளது. அந்த கட்சி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. ஆனால் பொதுத் தேர்வை நடத்த கூடாது என்று பாஜக வலியுறுத்தியது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதையே தெரிவித்தன.
முதல்வர் முடிவு
அதேநேரம் பெரும்பான்மையான கட்சிகள் எந்த முடிவு எடுக்கிறதோ அதை ஏற்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. கருத்துக்கள் அனைத்துமே பரிசீலனை செய்யப்பட்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதா வேண்டாமா என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்று பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.