முல்லை பெரியாறு அணை: 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை தேவை - துரைமுருகன் கடிதம்
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கு 15 மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள நீர்வளத்துறை அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கு 15 மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம் அனுப்பியுள்ளார்.
பேபி அணையை வலுப்படுத்த அந்த அணைக்கு கீழ் உள்ள 15 மரங்கள் தடையாக இருப்பதால் அவற்றை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசால் பல ஆண்டுகளுக்கு முன் விடுக்கப்பட்ட கோரிக்கையை கேரள அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் மத்திய நீர்வள ஆணையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு சிக்கல் இன்னும் தீராமல் நீடித்துக் கொண்டே செல்வதற்கும் இது தான் காரணமாகும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்திறப்பு, பராமரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழக கட்டுப்பாட்டிலே உள்ளது.
1979-ம் ஆண்டு இருமாநிலங்களும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில் அணையின் பலம், பாதுகாப்பு குறித்து கேரள அரசு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இப்பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றது.
இதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், 142அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்ததுடன் அணையை கண்காணிக்க மூவர் குழுவையும் நியமித்தது.
இருப்பினும் கேரளா இன்று வரை தொடர்ந்து அணை குறித்து பல்வேறு சர்ச்சைகளை கூறி நிர்ணயித்த அளவிற்கு நீரை உயர்த்த விடாமல் செய்து வருகிறது.
இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு 2014, 2015, 2018 என்று மூன்று முறை மட்டுமே 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பெருமழை பெய்த போதும் 142 அடியை எட்டும் முன்பே அணை திறக்கப்பட்டது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கைக்காக 15 மரங்களை வெட்ட கேரளாவிடம் அனுமதி கோரப்பட்டது. கேரளா தரப்பில் இருந்து பேபி அணையில் 15 மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி அளித்து கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லெண்ண அடிப்படையில் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார்.
ஆனால் தங்களை கேட்காமலேயே தமிழகத்துக்கு அனுமதி கொடுத்து வனத்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பிவிட்டனர் என கேரளா அமைச்சர் சசீந்தரன் கூறினார். கேரளா சட்டசபையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. அதனால் தமிழகத்துக்கு மரம் வெட்ட கொடுத்த அனுமதியை நிறுத்தி வைக்கிறோம் என்று கடந்த நவம்பர் மாதம் கேரளா அறிவித்தது. இந்தநிலையில் முல்லை பெரியாறு அணைக்கு அருகில் உள்ள முதுமைத் தடுப்புச் சுவரை வலுப்படுத்தும் வகையில் குடிமராமத்து பணியை தொடங்க 15 மரங்களை வெட்டவும், கீழ்க்காடுகளை அகற்றவும் தமிழகத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை கேரள அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
இன்றைய தினம் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த 15 மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கைத் தேவை என கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழக அமைச்சர் துரைமுருகன் கேரள அரசுக்கு எழுதி உள்ள கடிதத்தில், "தற்போது முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது அவசியம் ஆகும். எனவே இதற்காக 15 மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். எனவே ஏற்கனவே அளித்த அனுமதியை ரத்து செய்த கேரள அரசு அந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெகுநாட்களாக முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினை தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே இருந்து வருகிறது. கேரள மாநிலத்தில் முல்லைப் பெரியாறு அணை அமைந்திருந்தாலும் அந்த அணையைத் தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்த அணை மிகவும் பழமையாகியதாக கேரள அரசு கூறி வருகிறது.
எனவே அணை பழுதானதால் அதை இடித்து விட்டு வேறு அணை கட்ட வேண்டும் எனக் கேரளாவில் தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிபுணர்கள் இந்த அணையை ஆய்வு நடத்தி அணை பலமாக உள்ளதாகத் தெரிவித்த போதிலும் இதை கேரள அரசு ஒப்புக் கொள்ளாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications