‘பொய்ச் செய்தி’.. இப்போதான் தெரியும்..! திமுக எம்.பி, முதல்வர் ஸ்டாலினிடம் மன்னிப்பு கேட்ட குஷ்பு!
சென்னை : பொய்யான செய்தியைப் பகிர்ந்துவிட்டேன் எனக் கூறி தருமபுரி திமுக எம்.பி செந்தில் குமாரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு.
தருமபுரி திமுக எம்.பி செந்தில் குமார், பூமி பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த கல்லை எட்டி உதைத்ததாக வலதுசாரி ஆதரவாளர் சுமந்த் சி ராமன் குற்றம்சாட்டினார்.
அவர் சொன்ன தகவல் பொய் என்றும், அங்கிருந்த பெண்களுக்கு இடம் தரவே கற்களை நகர்த்தியதாகவும், சந்தேகம் இருந்தால் அங்கிருந்த மாவட்ட ஆட்சியரையும் பாமக எம்.எல்.ஏவையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றும் பதிலடி கொடுத்திருந்தார் திமுக எம்.பி செந்தில்குமார்.
சுமந்த் சி ராமன் வெளியிட்ட தகவலை பாஜக நிர்வாகி குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அது பொய்யான செய்தி எனத் தெரியவந்ததால் அதனை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் குஷ்பு.

தருமபுரி எம்.பி
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் வளாகத்தில் தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன நூலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி எம்.எல்.ஏ ஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பூமி பூஜை சர்ச்சை
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு திமுக எம்.பி செந்தில்குமார் காரில் ஏறிச் செல்லும்போது திமுக ஒன்றிய செயலாளர் சண்முகத்தை அழைத்து, அரசு நிகழ்ச்சி, அனைவருக்குமான நிகழ்ச்சியில் ஒரு மதம் சார்ந்த சடங்குகளை மட்டும் கடைபிடிப்பதாக இருந்தால் என்னை கூப்பிடாதீர்கள். ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனை செய்ய வேண்டுமா என கோபமாகக் கூறிவிட்டுச் சென்றார்.

சுமந்த் சி ராமன் ட்வீட்
பூமி பூஜையின்போது பூஜைக்கு வைத்திருந்த கல்லை திமுக எம்.பி செந்தில்குமார் காலால் தள்ளியதாக ஒரு தகவல் பரவியது. இதுகுறித்து வலதுசாரி ஆதரவாளரான சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலினை கவிழ்க்க திமுகவிற்குள் ஒரு அணி செயல்பட்டு வருகிறது. செங்கற்கல்லில் மஞ்சள், குங்குமம் இருக்கக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் அதை முன்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும். அதைவிடுத்து இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவது சரியல்ல என்று பதிவிட்டார்.

பொய் - செந்தில்குமார் விளக்கம்
அதற்கு பதிலளிக்கும் வகையில், திமுக எம்பி செந்தில் குமார், பூமி பூஜையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு "பெண்களுக்கு இடம் தரவே கற்களை நகர்த்தினேன். இந்தப் பதிவை நீக்கிவிட்டு மன்னிப்பு கேளுங்கள். இது அரசு செய்தித்தொடர்பாளர் எடுத்த வீடியோ. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் பாமக எம்எல்ஏ வெங்கடேசனிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். மத பதற்றத்தை தூண்டும் வகையிலும், ஒற்றுமையை குலைக்க முயலும் விதமாகவும் விஷமத்தனமான உள்நோக்கத்துடன் தவறான செய்தியை பகிர்ந்ததற்காக உங்கள் மீது எதிராக புகார் அளித்துள்ளேன்." எனத் தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்ட குஷ்பு
இதையடுத்து, திமுக எம்.பி செந்தில்குமாரின் செயல் குறித்து கேள்வி எழுப்பிய ட்வீட்டை நீக்கி மன்னிப்புக் கோரியுள்ளார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு. "இது பொய்யான செய்தி என்பதை இப்போதுதான் உறுதி செய்தேன். எனது குற்றச்சாட்டுகளால் திமுக எம்.பி செந்தில்குமார் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துகிறேன். இந்த ட்வீட்டை நீக்குகிறேன். மன்னிக்க வேண்டும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications