எனக்கு ஒரே “சாணக்கிய” தலைவர்.. யாரை சொல்கிறார் காயத்ரி ரகுராம்? ஓயாமல் தொடரும் பாஜக பஞ்சாயத்து
சென்னை: பாஜக மாநில தலைமையால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம், தனது ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்று பதிவிட்டு உள்ளார்.
பாஜக மாநில சிறுபான்மை அணி தலைவராக இருக்கும் டெய்சிக்கும், பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்த சூர்யா சிவாவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் கடந்த மாதம் வெளியானது.
அந்த ஆடியோவில், டெய்சியை கொச்சையான வார்த்தைகளை கொண்டு தரக்குறைவாக திட்டிய சூர்யா சிவா, கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காயத்ரி ரகுராம் கண்டனம்
இந்த ஆடியோவை பகிர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் பாஜகவில் பொறுப்பில் இருந்த நடிகை காயத்ரி ரகுராமும் அந்த ஆடியோவை வெளியிட்ட ஊடகத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து திருச்சி சூர்யாவை விமர்சித்ததுடன் அவருக்கு பதவி வழங்கியது பற்றியும் கேள்வி எழுப்பி இருந்தார்.

ஹைனாக்கள்
"சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜல்ட்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. களப்பணி இல்லாமல் சிலர் ஜல்ட்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும்.

சைக்கோ மூளை
திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு." என்று குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலை நடவடிக்கை
இதனை அடுத்து காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் ஆறு மாதம் அவர் நீக்கப்படுவதாக அறிவித்தார் அண்ணாமலை. இதனை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைமை, சூர்யா சிவா உள்ளிட்ட நிர்வாகிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம்.

தலைமையை காக்க..
கடந்த 29 ஆம் தேதி அவர் வெளியிட்ட பதிவில், "உங்கள் தலைமையையும் பதவியையும் காப்பாற்ற 100 பொய்களைச் சொல்லலாம். ஆனால் ஒரு உண்மை உங்கள் 100 பொய்களை அழித்துவிடும். தலைவனாக சித்தரிக்கும் முன் மனிதனாக இரு. நான் இதை ஒரு புத்தகத்தில் படித்தேன். ஆனால் இப்போது கருத்துகளைப் படிக்கிறேன். ஏன் இவ்வளவு வெறுப்பு? படித்ததை பிடித்தது, இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் என்று நினைத்தேன்." என்றார்.

தாமதிக்கப்பட்ட நீதி
அதேபோல், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கருத்துக்கு பதிலளித்த அவர், "இதில் எனக்கு புரியாத விசயம் என்னவென்றால், எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. இது சட்டத்துக்கு எதிரானது. விசாரணையும் நடத்தவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. அவசரமாக வழங்கப்படும் நீதி புதைக்கப்படும் நீதி. இன்று நான். நாளை யாரோ. இதை வெளியில் சொல்ல முடியாத மற்ற தொண்டர்களை நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் ஆதரவு." என்று கூறினார்.

யார் தலைவர்?
இந்த நிலையில் இன்று அவர் ஒரு புதிய பதிவை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில், "எனது ஒரே மிகப்பெரிய தலைவர் நரேந்திர மோடி ஜி. என்னுடைய ஒரே ஒரு சாணக்கிய தலைவர் அமித் ஷா ஜி. என்னுடைய ஒரே சின்னம் தாமரை, கிருஷ்ணரின் தாமரை பாதங்கள் . ஒவ்வொரு அடியும் தாமரை மலரும் ஒவ்வொரு அடியும் தாமரை வெற்றிப்படி." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications