மன்னிக்க ராகுல் காந்தி யார்? ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? கொந்தளித்த சீமான்!
சென்னை : ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? எனவும், ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை ராஜீவ் காந்தி செய்துள்ளார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கில் பிரதமர் ராஜீவ்காந்தி மட்டுமல்லாது, லதா கண்ணன், கோகிலா, சல்வார் கமீஸ் அணிந்திருந்த பெண், ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி, மாவட்ட காவல்துறை அதிகாரி முகமது இக்பால் உள்ளிட்ட 9 காவலர்கள் உயிரிழந்தனர்.

ராஜிவ் காந்தி படுகொலை
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் போன்றோர் கடந்த 30 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர். இந்நிலையில் பேரறிவாளனுக்கு தமிழக அரசு சார்பில் பரோல் வழங்கப்பட்டு, உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதற்கிடையே புதன்கிழமை பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை அளித்த நிலையில், பேரறிவாளன் அவரது தாயார் அற்புதம் அம்மாள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாம் தமிழர் சீமான்
தொடர்ந்து பேரறிவாளன் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் இன்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

கடும் விமர்சனம்
இந்நிலையில் ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? எனவும், ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை ராஜீவ் காந்தி செய்துள்ளார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், எனக்கும் பிரியங்காவுக்கும் மன்னிக்க கற்றுத் தந்தவர் தந்தை ராஜீவ் காந்தி. நாங்கள் ஒன்றாக கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் வைத்திருக்கிறேன் என்ற ராகுல் காந்தியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

பெரிய தியாகியா?
இதற்கு ஆவேசமாக பதிலளித்த சீமான், " ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார்; ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க? நாங்கள்தான் உங்களை மன்னித்தோம். ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார் அவர்" என ஆவேசமாகப் பேசினார். சீமானின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications