அண்ணாமலையின் செருப்பு அவ்வளவு காஸ்ட்லியானதா? பிடிஆர் மீதான விமர்சனத்துக்கு சீமான் கண்டனம்
சென்னை: தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மிக மோசமான வார்த்தைகளாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயருக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்தி வீரமரணம் அடைந்த மாவீரன் பூலித்தேவரின் 307-வது பிறந்த நாள், தனித் தமிழ்நாடு கோரி தமிழ்நாடு விடுதலைப் படை எனும் ஆயுதப் படை இயக்கம் நடத்தி போலீசாருடனான மோதலில் கொல்லப்பட்ட தமிழரசனின் 35-வது நினைவு நாள், நீட் தேர்வுக்கு எதிராக தூக்கிட்டு மாண்ட அனிதாவின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றன. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு விசாரணை நடைபெறும் நிலையில் அவ்வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு சொல்வது அவசியமற்றது; எங்கேயும் நிகழாத ஒன்று. நீதிபதிகள் கள ஆய்வு செய்வதும் அப்போதே தீர்ப்பு வருவதும் தவறான முன்னுதாரணமாகும்.
திண்டுக்கல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரை துணிச்சலுடன் மீட்ட போலீசார்!
8 வழி சாலை திட்டமும் திமுகவும்
8 வழிச் சாலை திட்டத்தை திமுக அன்று கடுமையாக எதிர்த்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இத்திட்டத்தை அன்று எதிர்த்தார். ஆனால் இன்று அமைச்சர் எ.வ.வேலு அப்படி இல்லை என்கிறார். முதல்வர் ஸ்டாலின் பேசியதை நான் அவருக்கு அனுப்பி வைக்க தயாராக இருக்கிறேன். நீங்கள் பேசியதை நீங்களே ஒருமுறை கேட்டுவிட்டு அதன்படியாவது நடக்க வேண்டும். இதுதான் திராவிட மாடல் என்பது.
ஆளுநர் அவிக்கு எதிர்ப்பு
திருக்குறளைப் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி எங்களுக்கு சொல்லித் தரும் நிலையில் நாங்கள் இல்லை. ஜியு போப் ஒரு மிஷினரிதான். ஆனால் உன் நாடும் மதமும் கிறிஸ்தவ மிஷினரிகள் போட்ட பிச்சைதான். இந்த நாட்டுக்கு இந்தியா என்று பெயர் வைத்தவன் எவன்? 600-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள், பாளையங்களால் ஆளப்பட்ட நிலப்பரப்பை நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கி இந்தியா என்று பெயர் வைத்தவன் எவன்? பல்வேறு மதத்தினரை இந்து என சட்டமாக்கியது எவன்?
பாஜகவை தடுக்க வியூகம்
அம்பானி தமது 1 லட்சம் கோடி ரூபாய் கடனை கட்ட முடியாது என மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து போல அதானியும் நோட்டீஸ் கொடுத்துவிட்டால் நாடு பிச்சை எடுப்பதைத் தவிர வேறுவழியே இல்லை. பரந்தூரில் கட்டப்படுகிற விமான நிலையமும் அதானி கைக்குதான் போகும். 2024 அல்லது 2023-ல் தேர்தல் நடைபெறும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மமதா, சந்திரசேகர ராவ், நிதிஷ் இணைந்து வலிமையான அணியை உருவாக்கினால் பாஜகவின் பெரும்பான்மையை தடுத்து நிறுத்த முடியும்.
அண்ணாமலைக்கு கண்டனம்
திமுகவில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றவர் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அவரது வழிமுறைகள் சரியானவை. பிடிஆர் குறித்த அண்ணாமலையின் விமர்சனங்கள் அநாகரீகமானவை. பண்பாடற்றவை. தனது செருப்புக்கு கூட பிடிஆர் சமம் இல்லை என்கிறார் அண்ணாமலை. அப்படி என்ன காஸ்ட்லியான செருப்பையா அண்ணாமலை போட்டுள்ளார். இது எல்லாம் பண்பாடு இல்லாத பேச்சு. இவ்வாறு சீமான் கூறினார்.