நாகூர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம், சிக்கல் சிங்கார வேலர் ஆலயம் திறப்பு - பக்தர்கள் வழிபாடு
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து நாகூரில் உள்ள புகழ்பெற்ற தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம், சாத்தூரில் உள்ள புகழ்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் ஆலயங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை: கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டு தளங்களை இன்றுமுதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் உள்ளிட்ட வழிபாட்டு தளங்கள் இன்று திறக்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களிலும் வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊடரங்கில் சில தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களிலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் காலை முதல் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

நாகை ஆலயங்கள்
கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டு தளங்களை இன்றுமுதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் உள்ளிட்ட வழிபாட்டு தளங்கள் இன்று திறக்கப்பட்டது.

தர்காவில் தொழுகை
இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்கா திறக்கப்பட்டதை தொடர்ந்து காலை முதலே பக்தர்கள் வர தொடங்கினர். தர்கா வருகை தந்த பக்தர்களுக்கு தெர்மல் பரிசோதனை, முக கவசம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

வேளாங்கண்ணியில் பிராத்தனை
இதேபோல உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் காலை 6 மணிக்கு தொடங்கிய சிறப்பு திருப்பலியில் கொரோனா பேரிடரில் இருந்து நாட்டுமக்கள் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. பேராலயம் திறக்கப்பட்ட முதல் நாளே நாகை மட்டுமின்றி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தந்தனர்.

தனி மனித இடைவெளி
கொரோனா பரவல் காரணமாக ஆலயத்தின் வெளியே சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் திருப்பலியில் பங்கேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு இருந்தது. மேலும், ஆலயத்தின் முகப்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், பேராலயத்தில் உள்ளே அமர்ந்து பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டு வழிபாடு நடத்திய உடனேயே வெளியேற்றப்படுகின்றனர்.

பக்தர்கள் உற்சாகம்
மேலும், வேளாங்கண்ணி வருகின்ற பக்தர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ள பேராலய பங்கு தந்தை, பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு பிறகு மாதாவை தரிசித்தது மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அளிப்பதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிங்கார வேலர் ஆலயம்
இதே போல சிக்கலில் உள்ள சிங்கார வேலர் ஆலயத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். முருகனுக்கு அரோகரா என்ற முழக்கம் கோவில்களில் எதிரொலித்தது.

மாரியம்மன் ஆலயம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள பெரும்பாலான கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அடிக்கப்பட்டது. சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் இன்று திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது . கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிய பின்னரே பக்தர்கள் கோவில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். முதல் நாளில் குறைவான பக்தர்களே சாமி தரிசனம் செய்ததால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

கடலில் நீராட தடை
பல்வேறு கட்டுபாடுகளுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 71 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி, தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனுமதி. மேலும் நாழிகிணறு தீர்த்தம் கடற்கரையில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை பூஜை பொருட்கள் கொண்டு செல்வது அர்ச்சனை போன்ற வேண்டுதல்களும் அனுமதி இல்லை. முடி காணிக்கை செலுத்துவதற்கு காது குத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரங்கநாதரை தரிசித்த பக்தர்கள்
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்பே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே, கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தனர். முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

பாலக்கரை உலகப்போர் பசிலிக்கா தேவாலயம்
இதேபோல் கொரோனா பொது முடக்கம் தளர்வையொட்டி திருச்சியில் 71 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்ட நத்ஹர்வலி தர்காவில் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர். மேலும் பாலக்கரை உலகப்போர் பசிலிக்கா தேவாலயமும் இன்று திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.












Click it and Unblock the Notifications