NeoCov: நியோ கோவ் வைரஸால் 3ல் ஒருவர் பலி என பரவும் தகவல்..பீதி வேண்டாம் என்கிறார் டேட்டா நிபுணர்
நியோ கோவ் வைரஸ் பற்றி வாட்ஸ் அப்பில் பரவி வரும் தவறான தகவல்களை பார்வேர்ட் செய்து பீதியை கிளப்ப வேண்டாம் என்று கொரோனா வைரஸ் அனாலிசிஸ்ட் விஜய் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: கொரோனா வைரஸ் பீதி அடங்கும் முன்பே நியோ கோவ் வைரஸ் பற்றிய தகவல் வெளியாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவவில்லை என்றும் வாட்ஸ் அப்பில் வரும் தவறான செய்திகளை பார்வேர்ட் செய்து பீதியை கிளப்ப வேண்டாம் என்று கொரோனா வைரஸ் அனாலிசிஸ்ட் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 37 கோடி பேரை பாதித்துள்ளது. தினசரியும் 32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஓமிக்ரான் கொரோனா காட்டுத்தீயாக பரவி வருகிறது. உயிரிழப்பு அதிகம் இல்லை என்றாலும் தினசரியும் கொரோனாவால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில்தான் நியோ கோவ் வைரஸ் பற்றி சீனாவின் வூகான் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து நியோ-கோவ் என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வூஹான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நியோ-கோவ் என்பது உருமாற்றம் அடைந்த கோவிட் 19 வைரஸ் கிடையாது. இது முழுக்க முழுக்க புதிய வகை சார்ஸ் கோவிட் ஆகும். தற்போது உலகம் முழுக்க பரவி வரும் கோவிட் 19 என்பது சார்ஸ் - கோவிட் குடும்பத்தின் ஒரு வகையாகும்.
கொரோனா வைரஸின் உருமாற்றம் கிடையாது இது. அதாவது டெல்டா, ஓமிக்ரான் போல இது கொரோனாவின் பரவலால் ஏற்பட்ட உருமாற்றம் கிடையாது. மாறாக சார்ஸ் கோவிட் குடும்பத்தை சேர்ந்த புத்தம் புதிய கொரோனா வகை வைரஸ்தான் நியோ-கோவ். இதை தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நியோ கோவ் பற்றி சீனாவின் வுஹான் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நியோ-கோவ் வகை கொரோனாவை கண்டுபிடித்து இருக்கிறோம். தென்னாப்பிரிக்காவில் இருக்கும் வெளவால்கள் இடையே இந்த நியோ-கோவ் பரவி வருகிறது. ஆனாலும் இது முழுக்க முழுக்க புதிய வைரஸ் என்றும் சொல்ல முடியாது. மெர்ஸ் வகை வைரசுக்கு கொஞ்சம் நெருக்கமானது. மத்திய கிழக்கு நாடுகளில் மெர்ஸ் பரவலுக்கு இதுவும் ஒரு வகையில் காரணமாக இருந்ததாக கருதப்படுகிறது.
வெளவால்கள் இடையே பரவும் இந்த நியோ-கோவ் விரைவில் மனிதர்களிடமும் பரவலாம். வெளவால்கள் மட்டுமின்றி மற்ற சில விலங்குகள் இடையிலும் இது பரவி வருகிறது. இதில் ஒரே ஒரு சின்ன உருமாற்றம் ஏற்பட்டால் போதும் அது மனிதர்களிடம் பரவ தொடங்கிவிடும்.
இதில் ஒரு உருமாற்றம் ஏற்பட்டால் போதும் PDF-2180-CoV எனப்படும் புதிய வகை நியோ-கோவ் உருவாகும். அது மனிதர்களின் செல்களுக்குள் செல்லும் திறனை பெறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவிற்கு வேக்சின் உருவாக்கியதை போல அவ்வளவு எளிதாக நியோ-கோவ் வந்தால் தடுத்து விட முடியாது. மெர்ஸ் கோவிட் மற்றும் கோவிட் 19 இரண்டின் குணமும் இதில் உள்ளது. நியோ-கோவ் என்பது கோவிட் 19 போல வேகமாக பரவும், அதேபோல் மெர்ஸ் கோவிட் போல அதிக மரணங்களை ஏற்படுத்தும். அதாவது வேகமாக பரவ கூடிய நியோ-கோவ் மனிதர்களிடம் வந்தால் பாதிக்கப்படும் 3ல் ஒருவர் பலியாகும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியோ கோவ் பற்றிய அச்சம் மக்களிடையே இப்போதே பரவ ஆரம்பித்து விட்டது. வாட்ஸ் அப்பில் தினம் தினம் புது புது தகவல்கள் பார்வேர்ட் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நியோ கோவ் பற்றியும் வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கொரோனா பற்றிய புள்ளி விபரங்களை வெளியிடும் விஜய் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், சமூக ஊடகங்களில் #NeoCov மீது அதிக கவனம் உள்ளது, இது ஓமிக்ரான், டெல்டாபோன்ற கோவிட்-19 இன் புதிய மாறுபாடு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இது 2012 இல் கண்டறியப்பட்ட மற்றொரு வகை கொரோனா வைரஸ், வெளவால்களில் கண்டறியப்பட்டது மற்றும் மனித பரவல் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே வாட்ஸ் அப் மூலம் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம். வாட்ஸ் அப்பில் வரும் செய்தியை பார்வேர்ட் செய்து பீதியை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அதிகாரப்பூர்வ செய்திகளைப் பின்பற்றவும் என்றும் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.