லைசென்ஸ் வாங்க மாறிய விதிகள்.. மக்களுக்கும் நல்லதல்ல. எங்களுக்கும் நல்லதல்ல.. டிரைவிங் ஸ்கூல்கள்
சென்னை: டிரைவிங் லைசென்ஸ் தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகளால் பயிற்சி கட்டணம் பல மடங்கு உயரும் என்றும் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படும் என்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் திறன் வாய்ந்த டிரைவர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகிறது. சாலை விதிகள் பற்றிய புரிதல் இல்லாமல் விபத்துகளும் அதிகமாக நடக்கிறது.
எனவே திறமையான டிரைவர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது.
இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!
தற்போது உள்ள நடைமுறையின் படி, அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனராக, பயிற்சி பெற்றவர்கள், ஆர்.டி.ஓ எனப்படும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகனத்தை முறையாக ஓட்டினால் மட்டுமே தற்போது வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அப்படியே மாற்றி உள்ளது.
ஓட்டுநர் லைசென்ஸ்
அதாவது அரசு அங்கீகாரம் பெற்ற மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள், லைசென்ஸ் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகனத்தை முறையாக ஓட்டி காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி 'மேம்படுத்தப்பட்ட' ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் படித்தாலே லைசென்ஸ் தரப்படும் என்று மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது ஓட்டுநர் லைசென்ஸ் பெற ஆர்டிஓ அலுவலகங்கள் செல்ல இனி தேவையே இல்லை என்பது தான் சட்டத்தின் சாரம்சம்.
சாதகமாக இல்லை
இந்த சட்டத்தினை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். மத்திய அரசின் முடிவு என்பது, ஓட்டுநர் பயிற்சி துறையை அப்படியே கார்ப்பரேட்டுகளை தாரைவார்க்கும் முயற்சி என்று கொதிக்கிறார்கள். ஏனெனில் அரசு மாற்றியுள்ள விதிகள் என்பது தற்போது ஓட்டுநர் பயிற்சி பள்ளி வைத்துள்ளவர்களுக்கு சாதமாக இல்லை.
2 ஏக்கர் நிலம்
அரசின் விதிப்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பயிற்சி அளிக்க 1 ஏக்கர் நிலப்பரப்பை அமைக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கு பயிற்சி அளிக்க 2 ஏக்கர் பரப்பளவில் கட்டமைப்பு வசதிகளை கண்டிப்பாக உருவாக்க வேண்டும். அவர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய வசதிகள் இருக்க வேண்டும். டிரையினிங் கொடுப்பவர் கண்டிப்பாக, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும்.
எப்படி கற்றுதர வேண்டும்
போக்குவரத்து குறியீடுகள், போக்குவரத்து விதிமுறைகள், வாகன கட்டமைப்பு, பொதுத் தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை அவர்கள் நடத்த வேண்டும். வாகனங்களை ஒரே மாதிரி நிலப்பரப்பில் மட்டுமே ஓட்டக் கற்றுக் கொடுக்க கூடாது. மலை, கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற பல்வேறு அமைப்புகளில் கற்பிக்க வேண்டும்.
வீடியோ பதிவு
இதுபோன்ற தீவிர பயிற்சிகளுக்கு பிறகு, சென்சார் பொருத்தப்பட்ட பிரத்யேக ஓடு பாதையில் வாகனம் ஓட்டும் சோதனை நடத்தப்பட வேண்டும். அது வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும். அதில் வெற்றி பெறுவோர், சான்றிதழ்களுடன் ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று, வாகனம் ஓட்டிக் காட்டாமலேயே லைசென்ஸ் பெறலாம். இந்த புதிய நடைமுறை, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சாத்தியம் இல்லை
ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதியால் ஓட்டுநர் பயிற்சி கட்டம் பல மடங்கு உயரும் என்று ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளான 2 ஏக்கர் பரப்பளவில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்பது நகரப்புறங்களில் சாத்தியம் இல்லாதது என்று கூறும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளிதரன், பொதுமக்களுக்கு பல சிரமங்கள் வரும் என்று தெரிவித்துள்ளார்,.
கட்டணம் பல மடங்கு உயரும்
இது தொடர்பாக முரளிதரன் கூறுகையில், மத்திய அரசின் புதிய கொள்கைகளால் ஓட்டுநர் பயிற்சி பள்ளி துறையினை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குதற்கான முயற்சி. பெரு நிறுவனங்கள் மட்டுமே இதனை நடத்த முடியும். இதனால் பொதுமக்களுக்கு நிறைய இடையூறுகள் ஏற்படும். அரசின் புதிய விதிகளின்படி பயிற்சி பள்ளிகளை நகர்புறங்களில், மாநகரங்களில் ஏற்படுத்த முடியாது. பொதுமக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். ஐந்தாயிரம் முதல் 6000 வரை இப்போது வசூலிக்கப்படும் பயிற்சி கட்டணம் இனி 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் ஆக அதிகரிக்கும். ஒட்டுநர் பயிற்சிக்கு சென்றால், இதையே முழுநேர பணியாக செல்ல வேண்டும். பிற பணிக்கு போக முடியாத நிலை ஏற்படும்" என்றார்.