தப்பு செய்து ஜெயிலுக்கு போன ஜெயக்குமாருக்கு ஏசி வசதியா தர முடியும்? மா.சுப்பிரமணியன் கிண்டல்
சென்னை: சிறையில் போலீசார் தன்னை தீவிரவாதிபோல் நடத்தியதாகவும் வெறும் தரையில் கொசுக் கடியில் தவிக்க விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து இருக்கிறார்.

பரபரப்பை ஏற்படுத்திய ஜெயக்குமாரின் பேஸ்புக் லைவ்
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது சென்னை ராயபுரத்தில் திமுக ஆதரவாளர் நரேஷ் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி அவரை பிடித்து அரை நிர்வாணப்படுத்தி ஜெயக்குமார் அதிமுக ஆதரவாளர்களுடன் தாக்குதலில் ஈடுபட்டார். இதனை தனது முகநூல் பக்கத்திலும் ஜெயக்குமார் நேரடி ஒளிபரப்பு செய்தார்.

சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமார்
பிடிப்பட்ட நரேஷின் சட்டையை ஜெயக்குமார் கழற்ற சொல்வதும், அவரது கையை பின்னால் கட்டி அரை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் நரேஷ் புகாரளித்தார். அதன் அடிப்படையில் 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயக்குமாரை பிப்ரவரி 21 ஆம் தேதி அவரது வீட்டுக்கு சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

19 நாட்கள் சிறைவாசம்
அத்துடன் அவர் மீது ஏற்கனவே நிலுவையில் இருந்த 2 வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார். ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று அவரை மூன்று வழக்குகளிலிருந்தும் ஜாமீனில் விடுவித்தது. 19 நாள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று காலை சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயக்குமாரை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

சிறை அனுபவத்தை பகிர்ந்த ஜெயக்குமார்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "3 மணிநேரமாக என்னை காரில் வைத்து சென்னையை சுற்றிக்காட்டினார்கள். சாப்பாடு, தண்ணீர் கூட தரவில்லை. அதிகாலை 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். எனக்கு கட்டில், தண்ணீர் என எதுவும் தரவில்லை. கொசுக்கடியில் அவதிப்பட்டேன். வெறும் தரையில் போலீசார் என்னை படுக்க வைத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் என்னை சுற்றி நின்று தீவிரவாதிபோல் சித்தரித்தனர்." எனக் குற்றம்சாட்டினார்.

ஜெயக்குமாரை கலாய்த்த மா.சுப்பியமணியன்
ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மா.சுப்பிரமணியன், "தவறு செய்துவிட்டு சிறை சென்றவர்களுக்கு ஏசியும் சோஃபாவுமா கொடுப்பார்கள்? சுதந்திர போராட்ட காலத்தில் இதைவிட கொடுமைகள் இருந்தன. அடுத்த முறை ஜெயக்குமார் சிறைக்கு செல்லும்போது 2 பேரை உடன் அழைத்துச் செல்லட்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications