தமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவு ஊரடங்கு... சாலைகள் வெறிச்சோடின.. கட்டுப்பாடுகள் என்னென்ன?
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு தற்போது அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்குகிறது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 79 ஆயிரத்தைத் தொட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு இரவு ஊரடங்கு உட்பட பல புதிய கட்டுப்பாடுகள் அறிவித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று நடைமுறைக்கு வந்தது.
முழு ஊரடங்குக்கு இப்போது அவசியமில்லை.. அது கடைசிக் கட்டம்தான்.. மோடி அறிவிப்பு
இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது
தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தற்போது அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் பெரும்பாலும் 9 மணிக்கே தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர். இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
எதற்குத் தடை
இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் நேரங்களில் தனியார்/ பொது பேருந்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன சேவைக்கு அனுமதி இல்லை. அதேபோல இரவு வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. அவசர மருத்துவ தேவை, விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்குப் பயணிக்க மட்டும் இரவு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எதற்கு அனுமதி
பால் விநியோகம், மருந்தகம், பத்திரிகை விநியோகம், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி போன்றவை இரவு நேரங்களிலும் செயல்படலாம். சரக்கு வானங்கள், எரிபொருள் வானங்கள் ஆகியவையும் இரவு நேரங்களில் செயல்படலாம். மேலும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய 57 பேர் உட்பட 10,986 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தை நெருங்குகிறது. புதிய கட்டுப்பாடுகளும் இரவு ஊரடங்கும் இன்று அமலுக்கு வந்த நிலையில், வரும் நாட்களில் கொரோனா பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.