சர்ச்சை.. பிரதமர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்காத மத்திய அமைச்சர்! மனோ தங்கராஜ் கண்டனம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அரசு விழாவில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமதித்துவிட்டதாக தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டுக்கான ரூ,31,400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி முன் முதல்வர் ஸ்டாலின் உரிமைக் குரல் பாஜகவை கதிகலங்கவைத்துள்ளது- குவியும் பாராட்டுகள்!
அரசு விழா
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுக, பாஜக, பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோ காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டனர்.
தமிழ்தாய் வாழ்த்து
நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்தாய் வாழ்த்துடன் இந்த விழா தொடங்கியது. அப்போது மேடையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அரங்கத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டின் சிறப்பு
இந்த விழாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். "தமிழ்நாடு வருவது எப்போது மகிழ்ச்சிக்கு உரியதே. தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை. தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகிறார்." எனப் பாராட்டினார்.
நிதின் கட்கரி சர்ச்சை
இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்ததாக தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார். "தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஒட்டுமொத்த தமிழ் மக்களை அவமதித்ததாகும். மத்திய அமைச்சர் தனது திமிரான, பொறப்பற்ற நடவடிக்கை குறித்து மக்களிடம் விளக்கமளிக்க வேண்டும்." எனக் கூறினார்.