எந்த புகாரும் வரக்கூடாது... நடவடிக்கை எடுப்பேன்.. வெற்றிபெற்ற கையோடு சாட்டை சுழற்றிய ஸ்டாலின்
எந்த புகாரும் வரக்கூடாது என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். வெற்றி பெற்றவர்கள் மீது எந்த புகாரும் வரக்கூடாது என்று தெரிவித்த மு.க ஸ்டாலின் நான் கண்காணித்துக்கொண்டே இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.
தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் 52.22 சதவீதம், நகராட்சிகளில் 68.22 சதவீதம், பேரூராட்சிகளில் 74.68 சதவீதம் வாக்குகள் பதிவானது.

வெற்றிக்கனியை பறித்த திமுக
21 மாநகராட்சிகளிலும் அதிக வார்டுகளை வென்ற திமுக வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளது. 138 நகராட்சிகளில் 130 நகராட்சிகளில் முன்னிலை வகித்தது. அதிமுக. 6 நகராட்சிகளில் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது. 489 பேரூராட்சிகளில் 400க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை திமுக கைப்பற்றி தன் வசப்படுத்தியதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 90 சதவீத வெற்றிகளை ருசித்துள்ளது. மாநகராட்சியில் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

வெற்றிக்கு பாராட்டு
அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மு.க. ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பினை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசினார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி கூறினார். மத சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறினார்.

நம்பிக்கையை காப்பாற்றுவோம்
கடந்த 9 மாத கால ஆட்சிக்கு கிடைத்த மாபெரும் நற்சான்று என்றும் கூறிய ஸ்டாலின் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளோம், இனியும் காப்பாற்றுவோம் என்றும் தெரிவித்தார். பெண்களுக்கு சம அங்கீகாரம் வழங்குவதுதான் நமது குறிக்கோள் என்றார். அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட கொங்குமண்டலத்தை கைப்பற்றியிருக்கிறோம் என்றும் ஸ்டாலின் கூறினார்.

கண்காணிப்பேன்
இந்த வெற்றியை பிரம்மாண்டமாக ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட மு.க ஸ்டாலின், மக்களுக்கு உங்களின் கடமைகளை செய்யுங்கள் என்று தெரிவித்தார். எந்த புகாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், நான் கண்காணித்துக்கொண்டே இருப்பேன் என்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.











Click it and Unblock the Notifications