வருமான வரி சோதனை..பல கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் பொய்.. ஜி ஸ்கொயர்
சென்னை: வருமான வரித்துறை சோதனையின்போது, மூன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது வருமான வரித்துறை சோதனை மூலம் தெளிவாகி உள்ளதாக ஜி ஸ்கொயர் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஜி ஸ்கொயருக்கு சொந்தமாக பிளாட்கள் உள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஜி ஸ்கொயருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஒரு வாரமாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இந்த சோதனை தொடர்பாக விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம், வருமானவரி சட்டங்கள் மற்றும் விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான வழக்கமான சோதனைதான் இது என்று தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. வருமான வரித்துறையின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின்போது, தாங்கள் அளித்த ஆவணங்கள் மூலம், தங்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியுடனோ, அரசியல் கட்சியைச் சேர்ந்த குடும்ப உறுப்பினருக்கோ தங்களுடன் தொடர்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
தங்களது நிறுவனத்துக்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பது உள்ளிட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனையின்போது, மூன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications