என்னை யாராலும் ஓரங்கட்ட முடியாது.. “அது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம்” - கொந்தளித்த ஓ.பி.எஸ்!
சென்னை : என்னை கட்சியில் இருந்து எந்த நேரத்திலும் யாராலும் ஓரங்கட்டவோ பிரிக்கவோ முடியாது. இது காலத்தின் கட்டாயம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதங்கள் கடுமையாக எழுந்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரிமையானது, மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கினால் அது ஜெயலலிதாவிற்கு கொடுத்த மரியாதை காலாவதியானதாக அர்த்தம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவில் சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து ஒற்றைத் தலைமை குறித்த விவாதங்கள் கட்சிக்குள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் தேவையற்றது. அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர் பேசியதன் விவரம் வருமாறு:

முதல்வர் பதவி வேண்டாம் என்றேன்
என்னைப் பொறுத்தவரையில் நான் இந்த இயக்கத்தில் இருப்பது தொண்டர்களை காப்பாற்றுவதற்கு மட்டுமே. உச்சபட்சமாக ஜெயலலிதாவால் இரண்டு முறை முதலமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறேன். ஜெயலலிதா மறைவுக்கு 2 நாட்கள் முன்னதாக என்னை முதல்வராகப் பொறுப்பேற்கச் சொன்னவர்களிடம் முடியாது என்றே மறுத்தேன். பின்னர் 3 மாத காலம் மட்டும் முதல்வராக இருப்பேன் எனச் சொல்லித்தான் பதவியேற்றேன்.

ஓரங்கட்டவே முடியாது
நான் எந்தவித அதிகார ஆசையும் கொண்டவனல்ல. தொண்டர்கள் இயக்கத்தில் ஒரு தொண்டனாக இருந்துதான் இன்றும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னை வந்து தொண்டர்கள் எந்த நேரத்திலும் ஓரங்கட்டவோ பிரிக்கவோ முடியாது. இது காலத்தின் கட்டாயம். ஏனென்றால் நான் தொண்டர்களோடு கலந்து பணியாற்றுகிறேன்.

இந்த நேரத்தில் தேவையா?
கடந்த இரண்டு மூன்று நாட்களாக என்னைச் சந்தித்த கட்சி நிர்வாகிகளிடம், எதிர்க்கட்சியாக நாம் இருக்கிறோம். அனைவரும் ஒற்றுமையோடு இருந்து ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியை பலப்படுத்தி பணியாற்ற வேண்டும் இந்த நேரத்தில் இந்த விவாதம் தேவையா? என்றுதான் கேள்வி எழுப்பினேன்.

யாரிடமும் பேசியதில்லை
இதுவரை நானோ, எடப்பாடி பழனிசாமியோ அல்லது இருவரும் சேர்ந்தோ ஒற்றைத் தலைமை பற்றி யாரிடமும் பேசியதில்லை. இப்போதைய சூழலில் இரட்டைத் தலைமை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரிமையானது. ஜெயலலிதா வகித்த பதவியில் வேறு யாரும் இருக்க வேண்டாம் என்றே இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது. அதுகுறித்து தீர்மானமே கொண்டுவரப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு துரோகம்
தற்போதுதான் உட்கட்சி தேர்தல் முடிந்து உள்ள நிலையில் பொதுச் செயலாளர் பதவி குறித்து பேசுவது தேவையற்றது. கட்சி எந்த சூழலிலும் பிளவுபடக்கூடாது என்பதே எனது கருத்து. மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கினால் அது ஜெயலலிதாவிற்கு கொடுத்த மரியாதை காலாவதியானதாக அர்த்தம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications