என்னை யாரும் அச்சுறுத்த முடியாது, தலைமையில் இருப்பவர்கள் பயமுறுத்த முடியாது- ஓபிஎஸ்
என்னை யாராலும் அச்சுறுத்தவோ, பயமுறுத்தவோ முடியாது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: ஒற்றைத்தலைமை யார் என்பதை தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். என்னை யாரும் அச்சுறுத்த முடியாது, தலைமையில் இருப்பவர்கள் பயமுறுத்த முடியாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு ஆட்சியும் கட்சியும் இயங்கி வந்தது. இதனையடுத்து இரட்டை தலைமையின் கீழ் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது.

இரட்டை தலைமையால் உடனடியாக முடிவு எடுக்க முடியவில்லையென்றும், கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் ஒற்றை தலைமை தான் அவசியம் என அதிமுக நிர்வாகிகள் கூறி தொடங்கினர். இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இதனையடுத்து ஒற்றைத்தலைமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது பரபரப்பை பற்ற வைத்தது. போஸ்டர் யுத்தம் தொடங்கியது முதல் இருவரும் மாறி மாறி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் 5 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியும் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
செய்தி சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஒற்றைத்தலைமை யார் என்பதை தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
கட்சி தனித்தனியாக பிரிந்து இருந்த போது எனது மக்கள் செல்வாக்கை பார்த்துதான் அதிமுகவோடு இணைப்புக்கு தங்கமணி என்னை அழைத்தார். கோவையில் நான் நடத்திய கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் எண்ணிக்கையை பார்த்துதான் என்னை அதிமுகவில் இணைய அழைத்தனர் என்றார்.
குழப்பமான சூழ்நிலையில் ஒற்றைத்தலைமை என்பது தேவையில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
என்னை யாரும் அச்சுறுத்த முடியாது, தலைமையில் இருப்பவர்கள் பயமுறுத்த முடியாது என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications