சட்டம் - ஒழுங்கு பிரச்சினை.. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு.. காவல்துறை விளக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் அக்.2ம் தேதி எந்தவொரு அமைப்புகளுக்கும் பேரணி நடத்த அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்எஸ்எஸ் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். செப்.28ம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விசிக பேரணி
ஆனால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் அக்.2ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சமூக நல்லிணக்க பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கலந்துகொள்வதாக அறிவித்தனர்.

ஆர்எஸ்எஸ்-க்கு அனுமதி மறுப்பு
இந்த நிலையில் அக்.2ம் தேதி ஆர்எஸ்எஸ் இயக்கம் சார்பாக ஊர்வலம் நடத்த பல்வேறு மாவட்டங்களிலும் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். திருச்சி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம்,. திண்டுக்கல். தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

காவல்துறை சுற்றறிக்கை
இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் மத உணர்வுகளை தூண்டும் பல நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடக்கும் சூழலில், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க எந்த அமைப்புகளின் ஊர்வலத்திற்கு, கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்க முடியாது. அக்.2ம் தேதி வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி, பேரணி நடத்த அனுமதி கோரியுள்ளனர்.

யாருக்கும் அனுமதி இல்லை
இதனால் அக்.2ம் தேதி எந்த அமைப்புகளுக்கும் ஊர்வலமோ, பேரணியோ நடத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் தரப்பில், சட்டம் - ஒழுங்கை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications