தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை.. அண்ணாமலை பரபர பேச்சு
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தனித்து நின்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் வலிமை பாஜகவுக்கு இல்லை என்பதால் தான் கூட்டணி அமைத்தோம் என்றும், திமுக வலிமையாக உள்ளது.. 40 சதவீதம் வாக்கு உள்ளது என்றும் பேசினார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபுவும் சுடச்சுட பதில் அளித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிரடி பேட்டிகளை அளித்து கவனம் ஈர்க்கக்கூடியவர். மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலும், அவ்வப்போது தனது அதிரடி கருத்துக்களால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

குறிப்பாக ஆளும் திமுகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் அண்ணாமலை, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்று பேசியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை பேசியதாவது:-
தனித்து நின்றால் பாஜக ஆட்சியை பிடிக்காது
"அரசியலைப் பொறுத்தவரை ஒரே இரவில் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது. போலீஸ் துறையில் இருந்து விலகி மனப்பூர்வமாக பாஜகவில் இணைந்தேன். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே பாஜகவின் இலக்காகும். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே நடைமுறை சாத்தியம் என்பதால் அதற்கேற்ற உத்தி வகுக்கப்பட்டது.
பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால், அப்படி போட்டியிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் வலிமை பாஜகவிற்கு இல்லை. அதனால் கூட்டணி அமைக்கப்பட்டது. கட்சிக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டும். தலைமை மாற்றமும் அப்படித்தான் நடைபெற்றது.
மற்றவர்களை அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை
அதிமுகவில் அனுபவம் உள்ள மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். உட்கட்சி விவகாரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதிமுகவிற்கும் எனக்கும் உரசல் இருந்தது. எனினும், நான் செய்தது எல்லாமே பாஜக வளர்ச்சிக்காக மட்டுமேயாகும். எனது கட்சிக்காக மட்டுமே நான் பேசினேன். மற்றவர்களை அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை.
அவர்களும் பதிலுக்கு விமர்சித்தனர். நானும் விமர்சனம் செய்தேன். ஊழல் பற்றி பேசினால் என்னவெல்லாம் நடைபெற்றது என்று பேசித்தான் ஆக வேண்டும். அப்போது கூட நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை குறிப்பிடவில்லை.
திமுக வலிமையாக உள்ளது
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தவெக தலைவர் விஜய் ஒரு பிரதான போட்டியாளராகவே உள்ளார். இளம் தலைமுறை வாக்காளர்களை கவர்ந்துள்ளார். 40 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் மட்டும் 2.28 கோடி பேர் இருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு 8 முதல் 12 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். ஆனால் விஜய்க்கு அப்படி கிடைக்குமா என்று தெரியவில்லை.
அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவார் என்று எதிர்பார்க்க முடியாது. திமுக, அதிமுக இரு கூட்டணிகளுக்கு வெளியே மட்டும் 20 முதல் 22 சதவீத வாக்குகள் உள்ளன. தற்போதைய சூழலை வைத்து பார்த்தால் திமுக வலிமையாக உள்ளது. திடமான கூட்டணி அவர்களுக்கு உள்ளது. 40 சதவீதத்திற்கும் மேல் வாக்கு சதவீதம் உள்ளது. ஆட்சிக்கு எதிரான மனநிலை பெரிதாக இல்லை. தற்போதுதான் உருவாகி வருகிறது." என்றார்.
அமைச்சர் சேகர்பாபு பதில்
இதற்கிடையே, அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு ரியாக்ட் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சேகர் பாபு கூறியதாவது:- "மக்கள் விரும்புகிற ஆட்சி திமுக ஆட்சிதான். திமுகவை கடுமையாக வசைபாடிய அண்ணாமலையே, மக்கள் மன்றத்தில் திமுக வலுவாக உள்ளது என்று பேசியிருக்கிறார்.
அதிமுக - திமுக இடையேதான் போட்டி; வரும் சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக கேட்கிறீர்கள். எந்த அரசியல் கட்சியாவது தேர்தலில் தோல்வி அடைவோம் எனக் கூறுவார்களா? எடப்பாடி பழனிசாமி 210 தொகுதிகள் என நிறுத்திவிட்டார். 234 என சொல்லியிருக்க வேண்டும். அதிமுக கோமா நிலையில் இருக்கிறது." என்றார்.












Click it and Unblock the Notifications