ஆஹ.. இடைத் தேர்தல்களில் என்ன ரிசல்ட் வந்தாலும், 2021 வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான்!
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளும், எக்ஸிட் போல்கள் கணித்ததை போலவே வந்தால், அப்புறம் ஜாம், ஜாம்மென்று எடப்பாடி ஆட்சி தொடரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள், பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கட்சி கூட்டணிதான், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன.
இதனால் பாஜக தலைவர்கள் குஷியாக உள்ளார்களோ, இல்லையோ, அதிமுக வட்டாரத்தில் சந்தோஷம் அலை அலையாய் அடிக்கிறதாம்.
எலக்சன் ரிசல்ட் நெருங்க நெருங்க.. 'கையை' உதறித் தள்ளுகிறதா அண்ணா அறிவாலயம்?
ஆறு சீட்டே அதிகம்
இத்தனைக்கும், தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பெரும் தோல்வியைத்தான் சந்திக்கப்போகிறது. ஆறு சீட்டே அதிகம் என்றுதான் பெரும்பாலான எக்ஸிட் போல்கள் சொல்கின்றன. அப்படியானால், இதே டிரெண்ட்தான், 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். ஆனாலும் அசரவில்லையாம் அதிமுக. மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் போதும். 2021 வரை நமது ஆட்சிதான் என்பதில் ஆழமான நம்பிக்கை வைத்துள்ளார்களாம் அதிமுக முக்கிய புள்ளிகள்.
அரசு பதவிக்காலம்
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் எப்படி நெரிகட்டும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். ஆனால் இது அரசியல் கணக்கு. இந்த கணக்கில் கூட்டினால், சில நேரம் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதற்கு பதிலாக 3 என்றும் ரிசல்ட் வரும். அப்படியானதுதான், பாஜக வெற்றியில், அதிமுக அரசின் ஆயுட்காலம் அடங்கியுள்ள சூட்சுமமும்.
சட்டசபை பலம்
தற்போதுள்ள சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கைப்படி, அதிமுகவுக்கு 114 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. தமிழக சட்டசபையின் பலம் 234 ஆகும். எனவே அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு, 118 எம்எல்ஏக்கள் பலம் தேவை. எனவே 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், ஆட்சியை தக்க வைக்க, குறைந்தது 4 தொகுதிகளையாவது அதிமுக வெல்ல வேண்டியது அவசியம். ஒருவேளை 4 தொகுதிகளுக்கும் கீழே அதிமுக வென்றால், உடனடியாக தமிழகத்தில் அதிமுக அரசு கலையும் வாய்ப்பு உள்ளது. இதுதான் கணிதம்.
இது அரசியல் கணக்கு
ஆனால் அரசியல் கணிதம் வேறு மாதிரியும் வேலை செய்யும். அதாவது திமுக எம்எல்ஏக்களில் சிலரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரை வைத்து, அதிமுக கொறடா முயற்சி செய்ய கூடும். எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, சட்டசபையில் நடைபெற்ற கலாட்டாக்களை காரணம் காட்டி, திமுக எம்எல்ஏக்கள் சிலரை தகுதி நீக்கம் செய்துவிட்டால், மொத்த சட்டசபை பலத்தை குறைத்து, அதிமுகவுக்கு பெரும்பான்மை இருப்பதாக காண்பிக்கலாம் என்ற திட்டம் அதிமுகவிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிமுகவில் குஷி
ஒருவேளை காங்கிரஸ் அல்லது வேறு கட்சிகள் தலைமையிலான ஆட்சி அமைந்திருந்தால், இதுபோன்ற முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடும் வாய்ப்பு உண்டு. எக்ஸிட் போல் கணிப்புப்படி, திமுக அமோக வெற்றி பெறப்போகிறது என்பதால், அவர்களிடம் உள்ள எம்பிக்களின் பலம் மத்தியிலுள்ள ஆட்சிக்கு அந்த அழுத்தத்தை கொடுத்துவிடும். ஆனால், எக்ஸிட் போல் கணக்குப்படி பாஜக வெற்றி பெற்றால், இதுபோன்ற தகுதி நீக்க விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வாய்ப்பில்லை. அதிமுக இப்போது கூட்டணி கட்சி வேறு. எனவே எடப்பாடி அரசுக்கு ஆபத்து வராது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.