வடகிழக்குப் பருவமழை தீவிரம்... சென்னை, காஞ்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 2 மணிநேரத்தில் கன மழை
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணிநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்தது.
வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 நாட்களில் தென்தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் நேற்று பரவலாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் மாலை 4 மணிமுதல் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இரவு நேரத்திலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு சென்ற அரசு பேருந்தின் மேற்பகுதி முழுவதும் சேதமடைந்திருந்ததால், மழை நீர் உள்ளே கொட்டியது. இதனால் அனைத்து பயணிகளும் மழையில் நனைந்தவாரும் பயணம் செய்தனர்.
தொடர் மழை காரணமாக பாலாறு மற்றும் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 57 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 21 ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன. இவ்விரு மாவட்டங்களி்லும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன.
இதனிடையே தென் மேற்கு வங்ககடலின் மத்திய பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்து வரும் நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை ஒட்டி நிலவக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளையும் 30, 31ஆகிய தேதிகளிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், என்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதியன்று தென் தமிழகம் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காரைக்கால், புதுச்சேரியிலும் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications