நுபுர் ஷர்மாவை கண்டிப்பது இருக்கட்டும்! இதுவரை தண்டிக்கப்படவில்லையே.. விளாசும் நாம் தமிழர் சீமான்!
சென்னை: பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும், இதுவரை கைது செய்யப்படவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதன் மூலம், ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையை செய்கிறது.

வெளிப்படையாக ஆயுதம் கொடுத்து பயிற்சி வழங்க முடியாது என்பதால், ராணுவத்தின் பெயரில் இதனை பாஜக அரசு செய்கிறது. 4 ஆண்டுகள் பணி முடித்து வெளியில் அனுப்பப்படும் வீரர்கள், அடுத்த என்ன வேலை செய்வார்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்று விமர்சித்தார்.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பேசிய சீமான், பழங்குடியின பெண்ணான திரெளபதி முர்முவை வேட்பாளராக தேர்வு செய்ததை வரவேற்கிறோம். ஆனால் பாஜக சார்பாக நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த 5 ஆண்டுகளில் பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.
தொடர்ந்து நுபுர் ஷர்மாவின் சர்ச்சை குறித்து பேசிய சீமான், பத்திரிகையாளர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளும் மத்திய பாஜக அரசு, நுபுர் ஷர்மா குறித்து பேச மறுக்கிறது. அவருக்கான தண்டனை என்ன என்பதை பற்றி இதுவரை யாரும் பேசவில்லை. நுபுர் ஷர்மாவை கண்டிப்பது இருக்கட்டும், ஆனால் அவர் இதுவரை தண்டிக்கப்படவில்லை. ஏன் இதுவரை கைது நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை என்று விமர்சித்தார்.
அதேபோல் மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் குறித்து பேசிய அவர், சிவசேனாவில் இருந்து அசாம் சென்ற அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு ரூ.130 கோடிக்கும் அதிகமாக பணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆட்சி செய்து வந்த நிலையில், அடிப்படை ஜனநாயகத்தை மதிக்காமல் பாஜக ஆட்சியமைத்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை தன்னாட்சி அதிகாரம் பெற்ற துறைகள் என்று நம்புகிறோம். ஆனால் பாஜக ஆட்சியில் அப்படியல்ல. வருமான வரித்துறையின் ரெய்டு வருகிறது என்றால் தேர்தல் நெருங்குகிறது என்று அர்த்தம் என்று விமர்சித்தார். அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை நாங்களும் மக்கள் போல் வேடிக்கை பார்க்கிறோம். ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று பிரிந்து இருப்பதால், எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. அது அதிமுக உட்கட்சி பிரச்னை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications