அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பண்ருட்டியார்.. ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பால் பரபரப்பு.. முக்கிய ஆலோசனை
சென்னை: அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட பண்ருட்டி ராமசந்திரனை ஓபிஎஸ் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அண்ணா காலத்தில் அரசியலைத் தொடங்கிய பண்ருட்டி ராமசந்திரன், கருணாநிதி, எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். ஒரு கட்டத்தில் பாமகவுக்கு சென்ற பண்ருட்டியார் திடீரென தேமுதிகவில் இணைந்தார்.
அங்கு அரசியல் ஆலோசகராக இருந்தார். மேலும் தேமுதிக சார்பில் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பண்ருட்டியார் ஆலந்தூர் தொகுதியில் வென்றார். இதையடுத்து தேமுதிக அவைத் தலைவராகவும் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.
மாஜி முடிவால் அப்செட் ஆன எடப்பாடி.. “கைக்கு வரும் நேரத்தில்”- கட்டுப்படுத்த முடியாமல் திணறும் ஈபிஎஸ்
தேமுதிக
இந்த நிலையில் தேமுதிகவில் பண்ருட்டி ராமசந்திரனின் ஆலோசனைகளை கேட்பதில்லை என்பதால் அவர் அதிருப்தியில் இருந்ததால் 2013 ஆம் ஆண்டு தனது பதவியிலிருந்து பண்ருட்டி ராமசந்திரன் விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவு
அங்கு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் ஓரங்கட்டப்பட்டதால் பட்டும் படாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அதிமுகவில் திடீரென ஒற்றைத் தலைமைக்கான மோதல் அதிகரித்து எல்லாமே ஓபிஎஸ், சசிகலாவின் கைகளை மீறி சென்றது. இதனால் சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமசந்திரனின் வீட்டுக்கு சென்று அவரை சசிகலா சந்தித்தார்.
ஓபிஎஸ்- பண்ருட்டியார் சந்திப்பு
இதையடுத்து அண்மையில் ஓபிஎஸ்ஸும் பண்ருட்டி ராமசந்திரனை சந்தித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது பண்ருட்டியார் விமர்சனங்களை அள்ளி வீசினார். இந்த நிலையில் நேற்றைய தினம் பண்ருட்டியாரை அதிமுக அரசியல் ஆலோசகராக ஓபிஎஸ் நியமித்து உத்தரவிட்டார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பண்ருட்டியார்
இந்த அறிவிப்பு வெளியிட்ட சில மணிகளில் பண்ருட்டி ராமசந்திரனை அதிமுகவிலிருந்தே நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஓபிஎஸ்ஸுக்கே அதிமுகவில் எதிர்காலம் இருக்கிறதா என்பது தெரியாத நிலையில் பண்ருட்டியாரை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமித்ததை அவர் ஏற்கக் கூடாது என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
மீண்டும் சந்திப்பு
இந்த நிலையில்தான் சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமசந்திரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். வயதாகிவிட்டதால் தன்னால் எந்த பதவிகளையும் ஏற்க முடியாது என பண்ருட்டியார் சொன்னதாகவும் அதற்கு அவரை சமாதானம் செய்ய ஓபிஎஸ் சென்றதாகவும் தெரிகிறது. ஆனால் அவர்கள் எது குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள் என்பது உறுதிப்பட தெரியவில்லை.