ஜன.23ல் ஓ பன்னீர் செல்வம் முக்கிய ‛மூவ்’.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை..ஆஹா
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணமடைந்த நிலையில் பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்தல் என்பது அதிமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனியாக செயல்பட்டு வருவது தான் இதற்கு காரணமாகும். இந்நிலையில் தான் ஜனவரி 23ல் ஓ பன்னீர் செல்வம் தனது மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதன் பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவெரா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் ஆவார். இந்நிலையில் தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணமடைந்தார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானது. மேலும் அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் வரும் ஏப்ரல், மே மாதங்களில் கர்நாடகா சட்டசபை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி? தேர்தல் பணிக்காக 14 பேர் கொண்ட குழு.. அண்ணாமலை அறிவிப்பு!
காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்
மேலும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி குறித்த விவரங்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மூலம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அப்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 27 ல் சட்டசபை தேர்தல்
அதன்படி பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த முறை இந்த தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் அந்த தொகுதியை காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு முறையே திமுக, அதிமுக ஆகியவை விட்டு கொடுக்குமா? இல்லை தங்கள் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை களமிறக்குவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவுக்கு எழுந்துள்ள சிக்கல்
திமுகவை பொறுத்தவரை இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கொடுக்கப்பட்டாலும், திமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் எந்த பிரச்சனையும் இருக்காது. மாறாக, அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனையால் அக்கட்சி தேர்தலை சந்திப்பதில் பிரச்சனை உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்படுகின்றனர். இந்த தேர்தலில் ஒருவேளை அதிமுக சார்பில் வேட்பாளர் போட்டியிட்டால் அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சேர்ந்து கையெழுத்திட வேண்டும். இது நடக்க வாய்ப்பு இல்லாத நிலையில் அந்த தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக நிறுத்தப்பட்டலாம். இருப்பினும் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது. மாறாக எடப்பாடி பழனிச்சாமி இந்த தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வழங்கினாலும் கூட அவர் இரட்டை இலைக்கு பதில் வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டி இருக்கும்.
ஓ பன்னீர் செல்வம் ஆலோசனை
இந்நிலையில் தான் சென்னையில் வரும் ஜனவரி 23ல் ஓ பன்னீர் செல்வம் அணியினர் தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். ஓ பன்னீர் செல்வம் தனது அணியின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், எடப்பாடி பழனிச்சாமியின் நகர்வின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதா? வேண்டாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதிமுக உள்கட்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் இந்த ஆலோசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.